மலேசிய இந்திய சமுதாயமே மஇகாவை இனியும் நம்பாதே ஏமாறாதே!

1957-ஆண்டு முதல் மஇகாவும் தேசிய முன்னணியும் இந்தியர்களை ஏமாற்றி வருகின்றனர். துன் சம்பந்தன், டான் ஸ்ரீ மாணிக்கவாசகம், டத்தோ ஸ்ரீ சாமிவேலு, டத்தோ ஸ்ரீ பழனிவேலு, ஆகியோருடன் நமது முன்னாள் பிரதமர்களான துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரசாக், துன் ஹுசேன் ஒன் , துன் டாக்டர் மகாதீர் முகமது, துன் அப்துல்லா அஹ்மத் படாவி மற்றும் இன்றைய பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் வரையில் அனைவரும் மலேசிய இந்தியர்களை தொடர்ந்து ஏமாற்றி தான் வருகின்றனர். 

1957 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தோட்ட துண்டாடல் பிரச்சனை மலேசிய இந்தியர்களை வாட்டி வதைத்தது. ஏழை தோட்ட தொழிலாளியின் சேமிப்பை பிடுங்கி அவர்களை காப்பாற்ற புறப்பட்டார் துன் சம்பந்தன். அன்றைய பெரிகாத்தன் அரசிடம் போராடி இந்தியர்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுத் தர அவர் தவறி விட்டார்.

1965 ஆம் ஆண்டு முதன் முதலில் பெரிகாத்தன் அரசு, அரசு நிலத்தை மக்களுக்கு வழங்கியது. அப்பொழுது சொந்த நிலம் இல்லாமல், சொந்த வீடு கூட இல்லாமல் தோட்டத்தில் குடியிருந்த நமது இந்திய சமுதாயம் புறக்கணிக்கபட்டது. மலைக் கிராமங்களில் சொந்த நிலத்தில் குடியிருந்த மலாய் காரர்களுக்கு மீண்டும் அரசு நிலங்கள் பெரும்பான்மையாக வழங்கபட்டன. மலாய்க்காரர்கள் தங்களது பூர்வீக கிராமங்களில் 10 ஏக்கர், 20 ஏக்கர் என நிலம் வைத்திருந்தனர். இருந்தும் மீண்டும் அரசு நிலங்கள் அவர்களுக்கே வாரி வழங்கப்பட்டன. இதனை நீங்கள் உங்களது வட்டாரங்களில் ஒரு ஆய்வை செய்து பார்த்து உறுதி செய்து கொள்ள முடியும்.

அந்த காலத்திலும் துன் சம்பந்தன் தலைமையிலான மஇகாவினர் இந்திய சமுதாயதிக்காக விழித்துக்கொண்டு குரல் கொடுக்கவில்லை. அவர்கள் அம்னோவிற்கு அடிமையாக வெண்சாமரம் வீசி கொண்டிருந்தனர் என்பது தான் உண்மை. ஆனால் அம்னோ அப்படி இருக்கவில்லை. அதன் முக்கிய தலைவர்கள் மலாய்க்காரர்களுக்கு இன வெறியை துண்டி வளர்த்து வந்தனர். இதன் விளைவால் 1969 ஆம் ஆண்டு பொது தேர்தலில் அம்னோ தலைவர்கள் அடைந்த தோல்வியையொட்டி முதன் முறையாக இன கலவரத்தை துண்டிவிட்டனர். இந்த இன கலவரத்திக்கு பின்னர் புதிய பொருளாதார கொள்கையை அம்னோவினர் கொண்டு வந்தனர்.

FELCRA ,FELDA ,RISDA போன்ற திட்டங்களை மலாய்க்காரர்களுக்கு என்று கொண்டு வந்தனர். அப்பொழுது இந்த நாட்டில் பால் மரம் சீவுதல், செம்பண்ணை தோட்டதில் வேலை செய்வதை தங்களது தொழில் திறனாக இந்தியர்கள் தான் கொண்டிருந்தனர். ஆனால் தேசிய முன்னணி அரசு கொண்டுவந்த மேற்கண்ட நில திட்டங்களில் பெரும்பான்மையான இந்தியர்களை புறக்கணித்து விட்டு மீண்டும் சொந்த நில உரிமையாளர்களான மலாயக்கரர்களுக்கு வாரி வாரி வழங்கப்பட்டன. 50 ஆண்டுகளுக்கு மேல் பால் மரம் சீவுதல், செம்பண்ணை பயிரிடுதல் தொழில் நன்கு திறன் பெற்றிருந்த இந்தியர்களை இந்த தேசிய முன்னணி அரசு ஓரங்கட்டி விட்டது. இந்தியர்களின் திறமையையும் உரிமையையும் அரசு புறக்கணித்து வருவதை கூட இந்த சொரணை கெட்ட மஇகா தலைவர்கள் உணரவில்லை. இந்தியர்களின் எதிர்கால நலனுக்காக, உரிமைக்காவும் குரல் கொடுக்க வில்லை. மாறாக மேற்கண்ட திட்டங்களில் அம்னோவினர் போட்ட பிச்சையை தங்களது சாதியினருக்கும், உறவுகளுக்கும், அடிமைகளுக்கும், தங்களுக்கும் எடுத்து கொண்டனர். மஇகாவினர் குறிப்பாக அதன் தலைவர்கள் இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து, திட்டமிடும் அறிவும் ஆற்றலும் அப்போதும் கொண்டிருக்கவில்லை என்பதை நீங்கள் அறியலாம்.

அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டுகளில் மஇகாவின் தலைவராக டத்தோ ஸ்ரீ சாமிவேலு பதவி வகித்தார். இவரது தலைமைத்துவ காலத்தில் தான் நாடு துரித பொருளாதார வளர்ச்சியை கண்டது. குறிப்பாக DASAR PENSWASTAAN, DASAR PERSYARIKATAN போன்ற மாபெரும் பொருளாதார திட்டங்களை நாட்டுக்கு துன் மகாதிர் முகமது கொண்டு வந்தார். மகாதீரோடு ஒரே மங்கிள் சாப்பிட்டு வந்த சாமிவேலு மலேசியா இந்தியர்களின் உரிமைகளுக்காக கோர போராட சாமிவேலு தவறி விட்டார். இதனை மகாதீரே 2008 ஆண்டு பொது தேர்தலுக்கு முன்பு பகிரங்கமாக அறிவித்தார். சாமிவேலுவும் அப்போதும் மகாதிரின் இந்த குற்றசாட்டை மறுக்கவில்லை என்பதை இந்த நாடும் இந்திய சமுதாயமும் அறிந்த மாபெரும் உண்மை.

மலேசியா இந்தியர்களை தொடர்ந்து ஏமாற்றுவது தேசிய முன்னணியும் மஇகாவும் என்பதை இந்திய சமுதாயம் நன்கு உணர்த்து விட்டது. ஆகவே இந்திய சமுதாயத்தை தொடர்ந்து ஏமாற்றும் மஇகாவின் பாச்சா இனியும் மலேசிய இந்தியர்களே மஇகாவை இனியும் நம்பாதே ஏமாறாதே!

-தெனாலி, கோலாலம்பூர்