தமிழ்நாடும் புதுடில்லியும் இணைந்தே இலங்கை இறுதிப்போருக்கு உதவின

“இறுதிப் போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும், தமிழக அரசும் கூட்டுச் சேர்ந்து தான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும் கூட தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசியிருக்கிறேன்.” இவ்வாறு மனித உரிமைச் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான அருந்ததி ராய் விகடனுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விகடனில் வெளிவந்துள்ள அவரின் நேர்காணலில் முக்கியமான சில பகுதிகள் வருமாறு,

கேள்வி : அரச பயங்கரவாதம், சுதந்திரம் குறித்து பேசுகிறீர்கள் ஆனால், இலங்கையின் பின்நின்று ஒரு போரை இந்திய அரசு நடத்திய போது நீங்கள் என்ன செய்தீர்கள்?

பதில் : இலங்கைப் போருக்கு எதிராகப் பேசிய ஒரு சிலரில் நானும் ஒருத்தி ஆனால், நான் என்ன பேசினேன்? என்ன செய்தேன்? என்பது அல்ல முக்கியம். நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசுடன் இந்திய அரசும், தமிழக அரசும் கூட்டுச் சேர்ந்து தான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும் கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர் கள் என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

கேள்வி : இன்றைய அருந்ததி ராய் உருவாக, சின்ன வயது வாழ்க்கை எந்த அளவுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொல்ல முடியுமா?

பதில் : நான் ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோது என் பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. கலப்புத் திருமணம் செய்து அந்தக் கணவனையும் பிரிந்த ஒரு பெண் தன் கிராமத்துக்கு மீண்டும் திரும்பும்போது நம் சமூகம் எப்படி வரவேற்கும் என்று சொல்ல வேண்டுமா என்ன? எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாங்கள் இருந்தோம். இப்படித்தான் உறவுகளும் சமூகமும் எனக்கு அறிமுகம் ஆனது.

கேள்வி : உங்கள் வாழ்க்கையை வடிவ மைத்ததில் உங்கள் அம்மாவுக்கு முக்கிய பங்கு உண்டு என்று சொல்லி இருக்கிறீர்கள்?

பதில் : அப்பா ஒரு குடிநோயாளி. என்னுடைய 20 வயதில்தான் அவரைப் பார்த்தேன். அதுவரை அப்படி ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பே எனக்குக் கிடையாது. ஆனால் நான் பார்த்த உன்னதமான பெண்களில் ஒருவர் என் அம்மா. அப்பாவைவிட்டுப் பிரிந்து வந்த பிறகு, ஊட்டியில் ஒரு சின்ன இடத்தில் நாங்கள் இருந்தோம். சாப்பாட்டுக்கே வழி இல்லை. அப்புறம் கேரளத்துக்குப் போனோம். வாழ்க்கையின் சங்கடங்களை அந்த வயதிலேயே நேரடியாகப் பார்த்ததால் உன்னைப் பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள் நீதான் மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற பாடம் கிடைத்துவிட்டது. முழுமையான சுதந்திரத்தின் பரவசம், பயங்கரம் இரண்டை யும் அந்தச் சூழல்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தது.

கேள்வி : இந்தியா உடையும் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். அப்படி உடைந் தால் ஓர் இந்தியராக அது உங்களைப் பாதிக் காதா?

பதில் : இந்தியா என்கிற வார்த்தையை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதே எனக்குத் தெரியவில்லை. தொன்மைமிக்க நாடு என்றா? உண்மையில் 1947இல் தான் இந்தியா என்ற நாடு உருவானது. அதுவும் பிரிவினையில் இருந்து, அப்படி பிரிவினையால் உருவான ஒரு நாடு காலனி ஆதிக்கச் சக்தி போலத்தான் செயல்படுகிறது.

மக்கள் போராட்டத்தை அடக்க இராணுவத்தை அனுப்புவது ஆகட்டும் மற்ற நாடுகளிலும் பிரிவினையை உருவாக்குவது ஆகட்டும் தேசியம் என்பது தவறு அல்ல ஆனால் அதில் நியாயம் இருக்க வேண்டும்.

வரைபடத்தில் என்னுடைய நாட்டின் அளவு பெரியதாக அல்லது சிறியதாக இருக்கிறது என்பது என்னைப் பாதிக்காது. ஆனால் நான் சார்ந்திருக்கும் நாட்டின் பெயரால் நடத்தப்படும் வன்முறையும் ஒடுக்குமுறையும் என்னை வெகுவாகப் பாதிக்கும்.

கேள்வி : இதுவரையிலான இந்தியப் பிரதமர்களிலேயே சிறந்தவர் என்று நீங்கள் யாரைச் சொல்வீர்கள்?

பதில் : அப்படி யாரும் இல்லை. ஆனால் மன்மோகன் சிங் மோசமானவர். இந்தியாவை விற்றவர்.

கேள்வி : மோடி-ராகுல், பிரதமர் பதவிக்கு யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

பதில் : எவ்வளவு மோசமான நாடு இது (சிரிக்கிறார்) இருவருமே பெரும் சீரழிவையே கொண்டுவருவார்கள். மோடி இன்னமும் பேரழிவைக் கொண்டு வருவார்.