நேரடித் தொழிலில் நிறையவே சம்பாதிக்கலாம்!…….. (கோடீசுவரன்)

direct sellingநாம் நிறையவே சம்பாதிக்க வேண்டும் என்னும் ஆர்வம் யாருக்குத் தான் இல்லை? நம் அனைவருக்குமே உண்டு.

நிறைய சம்பாதிப்பதற்குத் தொழில் செய்வதினால் மட்டுமே முடியும். வேலை செய்வதால் காலத்தை ஓட்டலாம். தொழில் செய்தும் காலத்தை ஓட்டுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் அரை வேக்காடுகளை நாம் ஓன்றும் செய்யமுடியாது.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்னும் ஆசை இருந்தாலும் இன்று பல பேருடைய பிரச்சனை பணம் தான். கையில் பணம் இல்லை. யாரும் கடன் கொடுக்க மாட்டர்கள். அரசாங்கம் கொடுக்கும் பணம் நமது இனத்தினருக்கு வந்து சேருவதில்லை.

ஆனால் அனைத்துயும் விட மிக மிகத் தலையாயது ஒன்று உண்டு.  நம்மை மற்றவர்கள் நம்ப வேண்டுமானால் நம்மிடமும் கொஞ்சமாவது பணம் இருக்க வேண்டும். மகாத்மா காந்தியையே நம்பாத உலகம் இது. நம்மை நம்ப வேண்டும் என்னும் அவசியம் யாருக்கும் இல்லை.

மூதலீடு இல்லாத தொழில் ஒன்று உண்டு என்றால் அது நேரடித் தொழில் மட்டும் தான்.

ஒரு காலக் கட்டத்தில் ஏதோ ஒரு சில தொழில்கள் மட்டும் தான் நேரடித் தொழிலாகச் செய்யப்பட்டன.

இன்று நிலைமை மாறிவிட்டது. இன்று அனைத்துப் பொருட்களும் நேரடித் தொழிலாகச் செய்யப்படுகின்றன. காப்புறுதி, துணிமணிகள், மருந்துப் பொருட்கள், அழகுசாமான்கள் இப்படி பலப்பல பொருட்கள் நேரடித் தொழிலாக விறபனையில் உள்ளன.

இதில் காப்புறுதி மட்டும் தான் கையில் எந்த விதமான பொருட்களும் இல்லாமல் வெறும் வருங்காலத்தை வைத்து, ஊகத்தை மட்டுமே வைத்து செய்யப்படுகின்ற ஒரு தொழில்.

தாங்கள் விற்பனை செய்வதற்கு ஏதாவது ஒரு பொருள் வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்ற தொழில்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இன்றையக் காலக் கட்டத்தில் இந்த நேரடித்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் நிறையவே உள்ளனர். அதுவும் நமது இனப் பெண்கள் பலர் சிறப்பாகச் செயல் படுகின்றனர். பகுதி நேரமாக வேலை செய்கின்ற ஆண்கள் பல பேர் உள்ளனர். கணவனும் மனைவியும் முழு நேரமாகச் செய்பவர்களும் உண்டு.

இவர்களில் பலர் இவர்கள் செய்கின்ற நேரடித்தொழிலைத் தங்கள் சொந்தத் தொழிலாக நினைத்து செய்பவர்களும் உண்டு. தவறில்லை. எட்டு-ஐந்து மணிக்கூட்டிலிருந்து வெளியாகித் தங்கள் சொந்தக் காலில் நிற்பது பெருமைக்குறியது விஷயமே!

இன்று நேரடித்தொழில் ஒரு வெற்றிகரமான தொழிலாக வலம் வருவதற்குக் காரணம் அவர்களுடைய விற்பனை யுக்தியே. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் விற்பனை முகவர்களுக்குத் தேவையான பயிற்சியைக் கொடுக்கின்றனர். இங்கு நாம் ஒரு முக்கிய விஷயத்தை உணர வேண்டும். யாராக இருந்தாலும் பயிற்சி மிக மிக அவசியம். இப்போது நாம் சொந்தத் தொழிலில் இருந்தாலும் நமக்கும் பயிற்சி என்பது அவசியமே. அதனை நாம் தேடிக்கண்டு பிடித்து பங்கேற்க வேண்டும். பயிற்சிகள் நமக்குப் புது புது செய்திகளைக் கொடுக்கின்றன.

நாம் எதற்கு நேரடித்தொழில் செய்ய வேண்டும்? தொழில் செய்யப் பணம் இல்லை என்று அழுது கொண்டிருப்பதை விட எந்தவித முதலீடும் இல்லாமல் நேரடித்தொழிலில் ஈடுபட்டு பணத்தைச் சேர்த்துக்கொண்டு பின்னர் நீங்கள் விரும்புகிற தொழிலில் ஈடுபடலாம்.

நேரடித்தொழில் என்பது வெறும் பயிற்சி மட்டும் அல்ல. வெறும் பணம் மட்டும் அல்ல. நேரடித்தொழில் உங்களை வெளி உலகத்திற்கு அறிமுகப் படுத்துகின்றது. உங்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. உஙளின் பேச்சுத் திறமையை அதிகப்படுத்துகின்றது. உங்களுக்குத் துணிச்சலைக் கொடுக்கின்றது. விற்பனை எப்படி செய்வது என்னும் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கின்றது. காரியங்களை எப்படிச் சாதிப்பது என்ற சாதனைகளைப் போதிக்கின்றது. குண்டு சட்டியில் குதிரை ஓட்டிகொண்டிருக்கும் உங்களை குதிரைப் பந்தயத் திடலில் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து ஓடவைக்கின்றது! அது தான் நேரடித்தொழிலில் மாபெரும் சக்தி.

நேரடித் தொழில் ஈடுபட்டு, தேவையான அளவு முதலீடு கிடைத்த பின்னர்,   பெரிய அளவில் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள் நம்மிடையே பலர் உள்ளனர்.

மினிமார்கெட் ஒன்றைத் திறந்து மனைவியின் கண்காணிப்பில் விட்டுவிட்டு நேரடித்தொழிலைத் தொடரும் கணவன்மார்களும் உண்டு. அல்லது தங்களது முதலீட்டில் சுப்பர்மார்கெட் ஒன்றைத்திறந்து கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முழு நேரமாக நடத்துபவர்களும் உண்டு.  இதெல்லாம் நாம் நமது அனுபவத்தில் காணுகின்ற உண்மைகள்.

ஆனால் பெரிய உண்மை ஒன்று உண்டு. மலேசியக் கோடீஸ்வரரான வின்செண்ட் டான் அவர்களைப் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள். நான்கு நம்பர் விளையாடுபவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் டோட்டோ என்றால் என்னவென்று தெரியும். பெர்ஜாயா கார்ப்பரெஷன் நிறுவனத்தின் உரிமையாளர் அவர். அவர் வாழ்க்கையைத் தொடங்கும் போது கையில் பணம் இல்லை. காப்புறுதி நிறுவனமொன்றில் முகவர் ஆனார். அவருக்கு வருமானமும் வந்தது; அதே சமயத்தில் வெளி உலகத் தொடர்பும் அவருக்கு ஏற்பட்டது. அப்போது அமெரிக்காவில் உள்ள துரித உணவு நிறுவனமான மெக்டொனால்டு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அதனை மலேசியாவுக்குக் கொண்டு வர ஏற்பாடுகள் செய்தார்,  அது ஒரு சாதாரான நிறுவனம் அல்ல. அதனை இங்குக் கொண்டு வருவதும் சாதாரண விஷயமும் அல்ல. பணம் என்பது பெரியத்தடை. ஆனால் முடியாத ஒரு காரியத்தை முடிய வைப்பவன் தான் சாதனையாளன். துணிந்தவனுக்குத் துக்கமில்லை என்பார்கள். துணிவை அவர் எடுத்துக்கொண்டார்! துக்கத்தை நாம் எடுத்துக்கொண்டோம்! இன்று அவர் கோடிஸ்வரர்கள் வரிசையில்!  நாம் கொடி கட்டும் வரிசையில்!

வேலை இல்லாத ஒரு காலக்கட்டத்தில், வேலை இழந்த பலருக்கு நேரடித்தொழில் ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்து கை கொடுத்திருக்கிறது. இன்றும் இருந்து வருகிறது. அது பலருக்கு முழு நேரத்தொழிலாகவும் ஆகிவிட்டது. பல குடும்பங்கள் இதன் வழி நல்ல முன்னேற்றமும் அடைந்திருக்கின்றனர்.

தொழில் செய்ய வேண்டும், தொழிலதிபர் ஆக வேண்டும் என்னும் ஆர்வமுடையவர்கள் எடுத்த எடுப்பில் பணம் போடத் தயங்குவார்கள். எந்தத் ஒரு தொழிலும் தெரியாமல் எதில் முதலீடு செய்வது?

நேரடித்தொழ்லில் என்பது உங்களுக்கு ஓர் அனுபவத்தைக் கொடுக்கும். உங்கள்  பார்வையை விசாலாமாக்கும்.

இன்று நம்மில் பலர் யார் யாரோ சொன்னார்கள் என்று சொல்லி பல முத்லீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து பணத்தை வீணடித்தது தான் மிச்சம். அட்டை வளர்ப்பு, தங்க முதலீடு என்று சொல்லி திருடர்களை எல்லாம் பெரிய பணக்காரர்களாக்கி விட்டோம்.

இனி வேண்டாம்! நேரடித்தொழிலில் ஈடுபடுவோம். சம்பாதிப்போம். அனுபவத்தைப் பெருக்குவோம். நல்லது கெட்டது புரிந்து கொள்ளுவோம். நாமும் வாழ்வோம். மற்றவர்களையும் வாழ வைப்போம். ஏமாறவும் வேண்டாம்!  ஏமாற்றவும் வேண்டாம்!  நிறையவே சம்பாதிப்போம்! நிறைவாகவே வாழ்வோம்!

வாழ்க தமிழினம்!

– கோடீசுவரன்