நீரின்றி ஓர் அணுவும் அசையாது…….( டாக்டர் மாரிமுத்து நடேசன்)

1 waterதற்போது நிலவி வரும் நீர்த் தட்டுப்பாடு, நீர் பயன்பாடு மற்றும் நீர்ச் சேமிப்பின் அவசியம் பற்றி  மலேசிய மக்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும். குறைந்த விழிப்புணர்வு மற்றும் எதையும் கருத்தில் கொள்ளாமல் எனக்கு என்னவென்று இருக்கும் இந்நாட்டு மக்களின் அலட்சிய போக்கும் இதற்கு ஒரு காரணம்.

தண்ணீரை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதனை ஆராயும் நேரம் வந்து விட்டது. பயனீட்டாளர்கள் மட்டுமின்றி நாட்டின் கொள்கை அமைப்பாளர்களும் தங்களின் தண்ணீர் பயன்பாட்டு அணுகுமுறையை மாற்றிக் கொள்வதோடு மட்டுமின்றி இந்த வளத்தைக் பாதுகாக்கும் வகையில் கொள்கைகளை உருவாக்க வேண்டும்.

சராசரியாக, மலேசிய மக்கள் தங்களின் தேவைக்கு அதிகமான நீரை உபயோகப்படுத்துகின்றனர். மலேசிய எரிசக்தி, இயற்கை மற்றும் நீர்வளத்துறை அமைச்சின் அறிக்கையின் படி, 2012 ஆம் ஆண்டு மட்டும் ஓர் ஆளுக்கு 212 லிட்டர் என்பதோடு மட்டுமின்றி இந்தப் பகுதியில் அதிகமான அளவில் உள்ளது நம் நாட்டு மக்களின் தண்ணீர் உபயோகம். சிங்கப்பூர் மக்கள் ஒரு நாளைக்கு ஒருவர் 151  லிட்டர் மட்டுமே உபயோகப்படுத்துகின்றனர். 150 லிட்டர் நீர் அளவு ஐ.நா சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விவேகமான நீண்ட கால பிரச்சாரம் செய்வதன் வழி மக்களின் இந்த விரய பழக்கத்தை மாற்ற முடியும்.  ஒரு தடவை பிரச்சாரம் செய்வதால் மட்டும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட முடியாது. அதனால் தொடர்ந்து நீண்ட காலத்திற்கு நடத்தப்படும் நீர் பற்றிய பிரச்சாரம் மக்களின் இந்தப் போக்கை மாற்றி தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர வைக்கும்.

உதாரணத்திற்கு, சிங்கப்பூர் தனது நாட்டின் நீர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை 1977 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடத்தி வருகிறது. இப்பிரச்சாரத்தின் வழி சிங்கப்பூர், நீர்த் தட்டுப்பாட்டுக்கு ஒரு சிறந்த தீர்வைக் கண்டுள்ளது. ஏனெனில் சிங்கப்பூரின் அண்டை நாடான நாம் தற்போது எதிர்நோக்கி இருக்கும் நீர்ப் பிரச்சனை அந்நாட்டுக்கு இல்லை.

பயனீட்டாளாகிய நாம் இனிமேலாவது நீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். கீழ்காணும் வழிமுறைகளைச் சரியாக பின்பற்றினால் ஓரளவு நீரைச் சேமிக்க முடியும்.

 வீட்டில் :

நமது அன்றாட தேவைகளுக்குத் தண்ணீர் மிக அவசியமாகிறது. எதிர்பாராத தொடர் வறட்சியினால் அணைக்கட்டு நீர் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலை தொடர்ந்தால், வெகு விரைவில் அணைக்கட்டு நீர் அபாய நிலையை அடைத்து விடும். இந்நிலையைத் தடுக்க நாம் நீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பின்வரும் குறிப்புகளைக் கொண்டு உங்கள் வீட்டில் நீரைப் பயன்படுத்தினால், நிச்சயமாக நீரை சேமிக்கலாம். :

துணி துவைத்தல்

*  துணி துவைக்கும் இயந்திரம் முழுமையாக துணிகள் நிறைந்தால் மட்டுமே அதை இயக்க வேண்டும். இதன் வழி நீரையும் எரிச்சக்தியையும் சிக்கனப்படுத்தலாம்.

*  செயல்திறன்மிக்க சலவை இயந்திரத்தைப் பொருந்தினால் ஒரு தடவை துவைக்கும் துணிகளுக்கு 64 லிட்டர் தண்ணீரைச் சேமிக்கலாம்.

*  அடர்ந்த நிறம் கொண்ட ஆடைகளைக் குளிர் நீரில் துவைத்தால், நீரும் சக்தியும் மட்டுமின்றி ஆடையின் நிறமும் மங்காமல் இருக்கும்.

சமையலறை

*  பாத்திரங்கழுவி முழுமையாக நிறைந்தால் மட்டுமே இயக்க வேண்டும். அவ்வாறு செய்வதனால் நீரையும் எரிசக்தியையும் சேமிக்க முடியும்.

*  செயல்திறன்மிக்க பாத்திரங்கழுவியை உபயோகித்தால் ஒரு தடவை 32 லிட்டர் நீரைச் சேமிக்கலாம்.

*  கையைப் பயன்படுத்தி இயற்கையாக தட்டுகளைக் கழுவும் போது நீரை வழிய விடாதீர்கள். சிங்கி முழுமையாக நீரை நிரப்பி அதில் அலசலாம்.

*  பாத்திரம் கழுவும் இயந்திரத்தில் பாத்திரங்களைக் கழுவினால் நீர் அதிகம் விரயமாகாது.

*  புதிய பாத்திரமாக இருந்தால் அடிக்கடி கழுவுவதைத் தவிர்க்கவும்.

*  நீர்க்குழாயைத் திறந்து கொண்டே பானை மற்றும் வாணலியைக் கழுவுவதை விட அவற்றை ஊற வைத்து கழுவ வேண்டும்.

*  பானை அல்லது வாணலியில் தண்ணீரை வைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளைக் அலசினால் நீரைச் சிக்கனப்படுத்தலாம்.

*  குளிர்ச்சாதன பெட்டியில் இருக்கும் உறைய வைக்கப்பட்ட பொருட்களை அதிக நீரில் கழுவாமல் அதனை ஊற வைத்தால் நீரைச் சேமிக்கலாம்.

*  கொஞ்சமான நீரில் உணவு சமைக்கும் உணவில் உள்ள ஊட்டச்சத்து அதிக அளவில் கிடைக்கிறது

*  அளவான வாணலியைத் தேர்ந்தெடுத்து சமைக்கலாம். ஏனெனில் பெரிய வாணலி அல்லது பானையில் சமைத்தால் அதிகமான நீர் தேவைப்படும்.

*  தெரியாமல் ஐஸ்கட்டிகள் கீழே விழுந்து விட்டால் அதை எடுத்து சிங்கில் வீச வேண்டாம். அதனை எடுத்து பூச்சாடியிலோ அல்லது மரத்தடியிலோ போடலாம்.

*  பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கழுவ பயன்படுத்திய நீரைக் கீழே ஊற்றாமல் வீட்டில் உள்ள பூச்செடிகளுக்கு ஊற்றலாம்.

குளியலறை

* குறைந்த வேகம் கொண்ட நீர் பீச்சியைப் பொருந்தவும். 10 லிட்டர் நீரைச் சேமிக்கலாம்.

*  குளியல் அறையின் திறப்புக் குழாய்களில் காற்று வசதியுடனான இயந்திரத்தைப் பொருந்தினால் ஒரு நாளுக்கு 4.8 லிட்டர் நீரை ஒருவரால் சேமிக்க முடியும்.

*  பல் துலக்கும் போதும் அல்லது சவரம் செய்யும் போதும் நீர்க்குழாய்களை அடைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் வழி ஒரு நாளைக்கு 40 லிட்டர் நீரைச் சேமிக்க முடியும்.

*  விவேகமான கழிப்பறைக் குடுவை பொருத்தினால் சுமார் ஒரு நாளைக்கு ஒருவரால் 76 லிட்டர் தண்ணீரை சிக்கனப்படுத்த முடியும்.

*  கழிவறையில் கசிவு உள்ளதா என்பதனை குறைந்தது ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது பரிசோதிக்கவும்.

*  கழிவறை தொட்டியில் உணவிற்காக பயன்படுத்தப்படும் வர்ணத்தைக் கலக்கவும். வர்ணம், நீர் பாய்ச்சாமல் வெளியேறுகிறது என்றால் நீர்க் கசிவு உள்ளது என அர்த்தம். அதனை உடனடியாக சரி செய்தல் வேண்டும்.

*  கழிவறையில் இரட்டை பறிப்பு (Dual-flush) கொண்ட கழிவறைக் கிண்ணத்தைப் பயன்படுத்தலாம்.

*  சவரக் கத்தியை ஒரு குவளையில் ஊற வைத்துக் கழுவினால் மாதத்திற்கு 1200 லிட்டரைச் சேமிக்கலாம்.

*  முடியைக் கழுவும்போது நீர்க்குழாயை அடைத்து வைத்தால் ஒரு மாதத்திற்கு 600 லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.

*  நுரையோடு கை கழுவும் போது நீர்க்குழாயை அடைக்கும் வழி நீர் குறைவாக பயன்படுத்தலாம்.

*  அதிக நேரம் குளிப்பதைத் தவிர்க்கவும். குளியல் தொட்டியில் நீரை நிரப்பி குளிப்பது 280 லிட்டருக்குச் சமமாகும்.

 

எழுத்து : டத்தோ டாக்டர் மாரிமுத்து நடேசன்.

மலேசிய பயனீட்டாளர் சம்மேளன தலைவர்.