ஆரம்பமாகிறது ஆட்சி மாற்றத்தின் இறுதி அத்தியாயம் – இதயச்சந்திரன்

maithiri-ranil-mahindaஆட்சிமாற்றத்தின் இரண்டாம் அத்தியாயத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறது இலங்கை அரசியல். மகிந்தரின் ‘நீடித்த’ சனாதிபதி ஆசை ஜனவரி 9 இல் கனவாகிப்போக, புதிதாக வந்த அவரின் சக தோழர் மைத்திரி, 19 இன் ஊடாக சனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை ‘மென்சக்தி’ நிலைக்கு மாற்றி விட்டார்.

முதலாம் பாகத்தில், ‘தமிழ் பேசும் மக்கள்’  மூலம் இழந்ததை, நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுவிடலாமென்று மகிந்தர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

இந்த ஆட்சி மாற்ற ஆட்டத்தில், வெளியாரின் வகிபாகம் குறித்து பேசாமல், கடந்து செல்ல முடியாது என்கிற உண்மையும் உண்டு.
உள்ளூரில் நடக்கும் கட்சிக் காய்நகர்த்தல்கள், அணிமாற்றங்கள், அரை மந்திரிகளின் பதவி துறப்புகள், ஊழல் குறித்த பெரிய ‘ஊதல்கள்’ போன்ற எல்லாவற்றின் பின்னணியிலும் பிராந்திய- மேற்குலக ஏகாதிபத்திய வல்லாளர்களின் வலிமையான மாயக் கரங்கள் இருப்பதை உணரக்கூடியதாகவுள்ளது.

பூகோள அரசியலில், ஆசியப்பிராந்தியமே தற்போதுள்ள கொதிநிலை மையமாகும்.
பங்குச் சந்தையில் மூன்றிலொரு வீத சரிவு ஏற்பட்டாலும், அதிலிருந்து மீளும் பொருண்மிய வல்லாண்மை சீன தேசத்திற்கு உண்டு என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்ட நிகழ்வு, மேற்குலக ஆதிக்கத்தினுள் இயங்கும் நிதி நிறுவனங்கள், கடன் வழங்கும் நிதியங்கள், அனைத்துலக வங்கிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

சீனாவிற்கும் இந்திய-மேற்குலக கூட்டிற்குமிடையிலான தீவு பிடிக்கும் பனிப்போர் தென்சீனக் கடலில் இருந்து விரிவடைந்து, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நாடு பிடிக்கும் மென்போராக மாறுவதைக் காணலாம்.

மக்களின் பொதுப்பார்வையில், ஊழலிற்கு எதிரான ஐக்கிய தேசிய முன்னணி அணிக்கும், மகிந்தரின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும் ( மைத்திரி இதில் sleeping partner ) இடையில் நிகழும் அக்கப்போர் போன்றதொரு தோற்றப்பாட்டினை இது கொடுத்தாலும், நிஜத்தில் இத்தேர்தலானது வல்லாதிக்கங்களின் போட்டிக்களம் என்பதே உண்மை.

‘சுதந்திரக்கட்சியை உடைத்துக்கொண்டு செல்ல நான் விரும்பவில்லை. சுதந்திரக்கட்சியை சிதறடித்தால் அது ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்’ என்று  மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூறும் அதேவேளை, ‘எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற மாட்டார். நான் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர் இல்லை. அவருக்கு வேட்பு மனு வழங்கியதில் எனக்கு உடன்பாடு இல்லை’ என்றும் கூறியுள்ளார்.

ஆகமொத்தம் இவருடைய பிரச்சினை, ‘கட்சியை உடைத்தார்’ என்கிற பழி தன் மீது விழுந்து விடக்கூடாதென்பதுதான். அத்தோடு, சனாதிபதித் தேர்தலில் மகிந்தருக்கு எதிராக போட்டியிட்ட பின்னர், எவ்வாறு நாடாளுமன்றத் தேர்தலில் அவரைக் கட்சிக்காக ஆதரிப்பது என்ற சங்கடமும் சேர்ந்து வாட்டுகிறது.

இன்னும் ஒரு மாதகாலம் இருக்கிறது. பூகோள அரசியல் போட்டிக்கு அமைவாக இரண்டு அணிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளன.
ஆனால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் குறித்து இங்கு போட்டியிடும் எவருக்கும் அக்கறையில்லை.
மலையக மக்களின் தினக்கூலி உயர்விற்காக குரல் கொடுப்போர், மாதச் சம்பளம் பெற்றுக் கொடுக்க முற்படுவதில்லை. ‘குந்தியிருக்கச் சொந்த நிலம்’ என்கிற வாழ்வுரிமைக் கோரிக்கை என்னவாச்சு என்று தெரியவில்லை.

உலகமயமாதலின் கார்பொரேட் பிதாமகர்களுக்கு, தரகு சேவகம் புரிய முண்டியடிக்கும் அரசியல் கட்சிகளே இப்போது எண்ணிக்கையில் அதிகம். ‘தூங்கும்’ ஆலயங்களின் டொலர்களுக்காக , மக்களின் உணர்வுகளை மூலதனமாக்கும் அரசியல் வியாபாரிகளும் அதிகம்.

இந்த நிலையில், வடக்கு அரசியலில் என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம்.

ஒரு காலத்தில் ‘ஊடகச் சமராடி’ என்று எம்மால் விளிக்கப்பட்ட வித்தியாதரன் அவர்கள், சுயேட்சைக் குழுவொன்றின் முதன்மை வேட்பாளராக யாழ்.மாவட்ட தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வித்தியாதரன், நாடாளுமன்றத் தேர்தலில் போராளிகளுடன் இறங்கியிருப்பது, வட – கிழக்கு தமிழ் அரசியலில் சிறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது.

அதாவது, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் (போராளிகள்) சிலர், வித்தி தலைமையில் உருவாக்கிய ‘ ஜனநாயகப் போராளிகள்’ கட்சியே , சுயேட்சையாகக் களமிறங்குகிறது.
இவர்களின் வேட்பாளர் பட்டியலில், முன்னாள் ஈரோஸ் இயக்கத்தின் மூத்த உறுப்பினர் சிவகுரு முருகதாஸ் ( ரவிதாஸ்) அவர்களும் இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்திற்கு இரண்டு போராளிகளை சேர்த்துக்கொள்ளுமாறு வித்தியாதரன் விடுத்த வேண்டுகோளை, சம்பந்தர் அவர்கள் ஏற்க மறுத்து விட்டார்.
அதாவது, ‘சர்வதேச நாடுகள் இதனை விரும்பாது’ என்கிற சம்பந்தரின் பதில், ஜனநாயகப் போராளிகள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் தொலைகாட்சி ஒன்றில் தமது நிலைப்பாட்டினைத் தெரிவித்த முன்னாள் புலி உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது காட்டமான விமர்சனத்தை முன் வைத்திருந்தார்கள்.

கூட்டமைப்பினைப் பலப்படுத்த எடுத்த முயற்சி தோல்வியடைந்ததால், சுயேட்சையாக களமிறங்குகின்றோம் என்று தன்னிலை விளக்கமளிக்கும் ஜனநாயகப்போராளிகள் குழுவினரின் ஒருங்கிணைப்பாளர் வித்தி, ‘ஏனைய மாவட்டங்களில் போட்டியிடாமல் தவிர்த்தது அங்கு வாக்குகள் சிதறிவிடாமல் இருக்க வேண்டும்’ என்கிறார்.

இதேவிதமான வாக்குச் சிதறல், யாழ்.மாவட்டத்திலும் ஏற்படும் என்பது நிஜம்.
இங்கு கூட்டமைப்பின், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டால், ஈ.பி.டி.பியும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் ஓரிரு ஆசனங்களைப் பெறும் வாய்ப்புண்டு.

அதேவேளை போராளிகளை உள்ளே அனுமதித்தால் ‘சர்வதேசம்’ முகத்தைச் திருப்பிக் கொள்ளும் என்ற  சம்பந்தன் அவர்களின் அரசியல் விளக்கத்தைக் கேட்கும் போது, வட மாகாணசபைத் தேர்தலில் திருக்கோணமலை மாவட்டத்தின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் (சசிதரன்) மனைவி அனந்தியை , வற்புறுத்தி அழைத்து வந்த  மாவை.சேனாதிராஜா மற்றும் ஸ்ரீதரனின் செயற்பாடுகளே நினைவிற்கு வருகிறது.

‘அன்று சர்வதேசம் ஏன் முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை’ என்கிற கேள்வியினை அவர்களிடமே விட்டுவிடுவோம்.

ஆனால் அனந்தி பெற்ற 87 ஆயிரம் புலி ஆதரவு வாக்குகளையிட்டு மேற்குலகும்  இந்தியாவும் ஆனந்தப்படவில்லை. அந்த நேரத்தில், மாகாணசபை முறைமையை அதிகப்படியான வடக்கு மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்கிற செய்தியை சிங்களத்திற்கும், சர்வதேசத்திற்கும் சொல்ல வேண்டிய அவசியம் மட்டுமே அவர்களுக்கு இருந்தது.

இவைதவிர, ‘தன்னிடமிருந்து உதவி பெற்ற  கடா, மார்பில் பாய்ந்து விட்டது’ என, கிழக்கிலிருந்து அவலக்குரல் கேட்கிறது.
அந்தக் குரலின் சொந்தக்காரர் யார் என்பது சொல்லாமலே புரியும். ஈழத்தமிழினம் இலகுவில் மறக்கக்கூடிய பெயரல்ல அது.
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு, தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி உதவி செய்ததால், அக்குரலுக்கு தேசியப்பட்டியலில் இடமும் கட்சியில் உதவித் தலைமைப் பொறுப்பும் அன்று கிடைத்தது.
இப்போது காட்சிகள் மாறிவிட்டன. அவருக்கு பேரினவாதத்தின் நிழல் வெளியில்கூட இளைப்பாற இடமில்லை.
‘மக்களின் வாக்கினைப் பெற்று எம்பியாக முடிந்தால் உள்ளே இரு’ என்பதுதான் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தீர்ப்பு.
மக்கள் விரோதப் போக்கு, எவ்வாறு  இந்தச் சமூகத்திலிருந்து ஒருவரை அந்நியமாக்கும் என்பதற்கு ,இந்த தேசியப்பட்டியல் விவகாரத்தில்   சிக்குண்டவரே முன்னுதாரணமாவார். அவர் தேர்தலில் போட்டியிட்டால் மக்களால் நிராகரிக்கப்படுவார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

‘அரசியல்வாதிகளில் இத்தனை நிறங்களா..?’ என்ற கேள்வியோடு எனது பத்தி எழுத்தினை நிறைவு செய்கின்றேன்.
அதாவது, மகிந்த அரசாங்கத்தில் பதவி வகித்தவர்கள், சலுகைகளைப் பெற்றவர்கள், தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட போதும், கிரீஸ் முகமூடிகள் பெண்களைத் துரத்தும்போது அடக்கி வாசித்தவர்கள், இப்போது மகிந்த மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் கிரீஸ் மனிதர்கள் வருவார்கள் என்று கூறுவதைப் பார்க்கையில் வேடிக்கையாக இருக்கிறது.

அடுத்த 30 நாட்களில், இன்னும் பல வேடிக்கை மனிதர்களின் போலி முகங்களை மக்கள் இனங் காண்பார்கள்.

-http://www.pathivu.com

TAGS: