14-ஆவது பொதுத் தேர்தல் பிரதிபலிப்பு: மஇகா-வில் சரவணன் கை ஓங்குகிறது!

14-ஆவது பொதுத் தேர்தல் முடிவால் மஇகா-வில் மாற்றம் நிகழலாம். அது, இன்னொரு பதவிப் போராட்டத்திற்கு அடித்தளமும் அமைக்கலாம். ம.இ.கா.வின் நெடிய வரலாற்றை உற்று நோக்குபவர்களுக்கு ஓர் உண்மை பளிச்சென தெரியும்.

விட்டு விட்டு பதவிக்காக போராட்டம் இடம் பெறும் இடம் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் மாளிகை ஆகும். அத்தகையப் போராட்டம், சமுதாயத்தின்பால் இல்லாமல், பதவிப் போராட்டமாகத்தான் இருக்கும்.

சுப்பிரமணியம் என்ற பெயர்க் காரணத்தால் மட்டும் அரசியல் வாழ்வு பெற்ற டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம், 2008 பொதுத் தேர்தலில் தேசியத் தலைவர் துன் சாமிவேலு, துணைத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலு உதவித் தலைவர் டத்தோ சி.சோதிநாதன் ஆகியோர் அதிரடியாக தோல்வியைச் சந்தித்ததால், 11-ஆவது நாடாளுமன்றத்தில் அமைச்சரவை செயலாளராக மட்டும் பொறுப்பு வகித்த சுப்பிரமணியம் 12-ஆவது நாடாளுமன்றத்தில் திடீரென்று முழு அமைச்சரானார்.

தேர்தலில் அவர் பெற்ற வெற்றியும் மற்றவர்கள் பெற்ற தோல்வியும்தான் அவரை அரசியல் உச்சத்திற்குக் கொண்டு சென்றது. அதைப் போன்ற பின் விளைவு இப்பொழுதும் ம.இ.கா-வில் நிகழலாம்.

சிகாமாட் தொகுதியில் பிகேஆர் கட்சி வேட்பாளரிடம் அவர் தோல்வி முகத்தில் இருக்கிறார். மஇகா-வில் 2015 நவம்பர் 6-இல் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் சுப்பிரமணியம் தன்னை மறைமுகமாக வஞ்சித்துவிட்டதாக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் சரவணன் அதே மக்கள் நீதிக் கட்சி வேட்பாளருக்கு எதிராக வெற்றி முகத்தில் இருக்கிறார்.

இந்த 14-ஆவது பொதுத் தேர்தலில் அநேகமாக சுப்பிரமணியம் தோற்பதும் சரவணன் வெல்வதும் நிச்சயமாகிவிட்ட நிலையில் இதன் பிரதிபலிப்பு மஇகா தலைமைத்துவத்திலும் நாளடையில் தெரிய வரலாம்.