பேராக் மாநில சபாநாயகராக திரு. மணிவண்ணன் அவர்களை நியமிக்க, மலேசிய நாம் தமிழர் இயக்கம் வேண்டுகோள்

கடந்த 14வது பொது தேர்தலில் பேராக் மாநிலத்தை கைப்பற்றிருக்கும் பாக்காத்தான் அரப்பான் அரசு மாநில சபாநாயகராக ஊத்தான் மெலிந்தான் சட்டமன்ற வேட்பாளர் திரு. மணிவண்ணன் அவர்களை நியமிக்க மலேசிய நாம் தமிழர் இயக்கம் வேண்டுகோள்  விடுப்பதாக இயக்க தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

கடந்த பொது தேர்தலில் மக்கள் திரட்சியில் மாற்று அரசியல் புரட்சியை உருவாக்கி, 60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சியை வீழ்த்தி பாகாத்தான் அரப்பான் மலேசிய நாட்டின் ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. இந்த அரசியல் சுனாமியில் பேராக் மாநிலம் உட்பட பல மாநிலங்களை வெற்றி கொண்டன. இந்த ஆட்சி மாற்றத்திற்கு தமிழர்களின் 85% பங்களிப்பு அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.

முடிந்த தேசிய முன்னணி ஆட்சியின் போது, எதிர்க்கட்சி பிரதிநிதியாக பல மக்கள் நல சிக்களுக்கு நாடாளுமன்றத்தில் துணிச்சலாக குரல் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்க் கல்விக்கு கேடு விளைவிக்க தேசிய முன்னணி அரசு கொண்டு வந்த டிஎல்பி திட்டத்தை நாடாளுமன்றத்தில் இறுதி வரை எதிர்த்த ஒரே தமிழருமான திரு. மணிவண்ணன் ஆவார் என்றார்.

திரு. மணிவண்ணன் அவர்கள் நாடாளுமன்றத்தில் திறமையாகவும் துணிச்சலாகவும் பேச கூடிய தலைவர்களில் ஒருவர். நடந்து முடிந்த பொது தேர்தலில் கட்சி தேர்வுக்கு இணங்க ஊத்தான் மெலிந்தான் சட்டமன்றத்தில் போட்டியிட நேர்ந்தது. அவர் தோல்வியுற்றாலும் கூட அவரின் சேவை இங்கேயே முடங்கி விட கூடாது. அவர் சேவை மேலும் தொடர பேராக் மாநில சபாநாயகர் பதவி வழங்கப்பட வேண்டும். அவருக்கு சபாநாயகர் பணி வழங்குவதன் மூலம் பேராக் மாநில மக்கள் அதிகமான நன்மைகள் பெற முடியும் என தாம் நம்பிக்கை கொள்வதாக மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தேசிய வீயூக இயக்குநரும் பேராக் மாநில ஒருங்கிணைப்பாளரான திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்துக் கொண்டார்.