ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

மீனவர்கள் போராட்டம்

இலங்கை மற்றும் மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும், தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்வதை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழக மீனவர்களின் எதிர்ப்பை மீறி பல கோடி மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை வசம் இருந்த மீன்பிடி விசைப் படகுகளை இலங்கை அரசு ஏலம் விட்டதற்குமத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காததை கண்டித்தும், இன்று (பிப்ரவரி 11) ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை 4 மணியளவில் ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளமீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடத்த வந்தனர்.

அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ரயில் நிலையம் முன்பு தடுப்புகள் வைத்து மீனவர்களை தடுத்து நிறுத்தினர்.

அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரயில் மறியல் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டனர்.

ஆனால், போராட்டத்தை கைவிட மறுத்த மீனவர்கள் ரயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாதபட்சத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து படகுகளின் உரிமம் மற்றும் மீனவர்கள் இந்திய பிரஜை இல்லை என குறிப்பிடும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மீனவர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ராமேஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப் போவதாக கூறி விட்டு மீனவர்கள் கலைந்து சென்றனர்.

BBC