இலங்கை: யுத்த சாட்சியங்கள் அடிப்படையில், இரண்டாவது இடைக்கால அறிக்கை தயார்

பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை என்ற போதிலும், யுத்தத்தின் போது உயிரிழந்த உறவினரை தனிப்பட்ட முறையில் நினைவுகூர அனுமதி வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

2021 ஜனவரி 21ஆம் தேதி, உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸின் தலைமையில் இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கை, 2021ம் ஆண்டு ஜுலை மாதம் 21ம் தேதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

யுத்தத்தை எதிர்கொண்ட மற்றும் யுத்தம் தொடர்பான அனுபவங்களைக் கொண்ட யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வசிக்கும் 75 பேர் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில், 107 பக்கங்களுடனான இரண்டாவது இடைகால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு கண்டறிந்த விடயங்களை உடன் விசாரித்து, அது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யவோ அல்லது நட்ட ஈடு வழங்கவோ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை என்றும் யுத்தத்தின் போது உறவினர் ஒருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட முறையில் அவரை நினைவுகூர அனுமதி வழங்கவும், ஆணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன், ஜூன் மாதத்துக்குள் ஆணைக் குழுவின் இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க முடியுமென அதன் தலைவரும் உயர்நீதிமன்ற நீதியரசருமான ஏ.எச்.எம்.டீ. நவாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

BBC