விலை அதிகரிக்கும் வரை பதுக்கலில் ஈடுபட்டது அரசு: எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை -ஆனந்த பாலித

இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்துவதற்காகக் கடந்த சில வாரங்களாக எரிபொருட்களை மறைத்து வைத்திருந்தது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

20 ஆயிரம் மெற்றிக் டன் பெட்ரோல் , 7 ஆயிரம் மெற்றிக் டன் சுப்பர் டீசல், 6 ஆயிரம் மெற்றிக் டன் சுப்பர் பெட்ரோலைக் கூட்டுத்தாபனம் மறைத்து வைத்து விலையை அதிகரித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பெற்றோலிய ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு கறுப்புச் சந்தை வியாபாரி கூட இவ்வாறான சட்டவிரோத கொடுக்கல் – வாங்கலில் ஈடுபடவில்லை. எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் செலுத்தப்பட்ட 55 ஆயிரம் மெற்றிக் டன் எரிபொருள் இறக்கப்படாமல் கப்பலில் வைக்கப்பட்டிருந்தது.

கூட்டுத்தாபனத்தில் உள்ள கிடங்குகளில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல், 7 ஆயிரம் மெட்ரிக் டன் சூப்பர் டீசல் மற்றும் 6 ஆயிரம் மெட்ரிக் டன் சுப்பர் பெட்ரோல் இருந்ததும் விநியோகிக்கப்படவில்லை.

எரிபொருளுக்கு உண்மையாகவே தட்டுப்பாடு ஏற்படவில்லை. நாட்டுக்கு வந்த எரிபொருளுக்குப் பணம் செலுத்தப்பட்டிருந்தது. எனினும், அரசு விலை அதிகரிக்கும் வரைபெட்ரோலை விநியோகிக்கவில்லை” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

Tamilwin