கச்சதீவை மீளப்பெறுவதால் எங்களுடைய கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: சி.வி.கே.சிவஞானம்

கச்சதீவு மீளப்பெறுவதன் காரணமாக எங்களுடைய கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதனை மிகவும் அனுதாபத்துடன் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அவருடைய அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கச்சதீவு மீட்பு தொடர்பாகத் தமிழக கடற்தொழிலாளர்கள் சார்ந்த கருத்தைத் தமிழ் நாட்டு முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்ததிற்குத் தேசிய ரீதியாக அண்ணாமலையும் ஆதரித்து இருந்தார்.

உலகத் தமிழர்களின் தலைவன் 

ஆனால் உண்மையான நிலை என்னவென்றால் ஸ்டாலினை பொறுத்தவரையில் உலகத் தமிழர்களின் தலைவராக நாம் பார்க்கின்றோம். உலகத் தமிழர்களாகப் பார்க்கின்ற பொழுது இலங்கைத் தமிழர்களும் ஒன்றுதான்.

இந்தியா தமிழர்களும் ஒன்றுதான். பாக்குநீரினை பிரிவு தவிர எங்களுடைய கடற்தொழிலாளர்களும் இந்திய கடற்தொழிலாளர்களும் ஒன்றுதான்.

எங்களுடைய கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பாரிய பிரச்சினை தமிழக கடற்தொழிலாளர்களை தவிர நம் நாட்டினுடைய தெற்குப்பகுதி கடற்தொழிலாளர்களுடைய பாதிப்பும் எங்களுடைய வடக்கு கடற்தொழிலாளர்களுக்கு இருக்கின்றது.

மட்டக்களப்பிலிருந்து முல்லைத்தீவு வரையான கடற்பரப்பில் சிங்கள கடற்தொழிலாளர்கள் எங்களுடைய வளங்களைச் சுரண்டிக் கொண்டு செல்கின்றார்கள். இதனால் எங்களுடைய தமிழ் கடற்தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றார்கள்.

கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

சுயாதீனமாக நம்மவர்கள் கடற்தொழில் மேற்கொள்வதற்கு நெடுந்தீவு பகுதி கச்சதீவு களமாக இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் கச்சதீவை மீளப்பெறுவது என்பது எங்களுடைய கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதனை மிகவும் அனுதாபத்துடன் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்திருந்தார்.

ரணில் விக்ரமசிங்க செய்த புண்ணியத்தினால் பதுங்கி இருந்தவர்கள் நாடாளுமன்றம் சென்று சுயாதீனமாகக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

இது ரணில் விக்ரமசிங்க செய்த பிழை. மகிந்த ராஜபக்சவோ, பசில் ராஜபக்சவோ இனிமேல் பிரதமர் பதவிக்கு வர முடியாது. ஆனால் பிரதமர் பதவியினை தீர்மானிப்பது பெரமுன கட்சியாகவே அமையும்.

21ஆம் சீர்திருத்தம் என்பது எங்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை. ஜனாதிபதியின் அபரிமிதமான அதிகாரத்தைத் தக்க வைப்பதே 21ஆம் சீர்திருத்தம்.

ரணில் விக்ரமசிங்க நல்ல நோக்கத்துடன் வந்தாலும் கவலைப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.