சீனாவுக்கு செல்ல ரணில் திட்டம்

புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ரணிலின் சீன விஜயம்

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “பல மாதங்களாக சீனாவிடம் இருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

சீனாவின் இந்த நிதி உதவி குறித்த விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும் அடுத்த சந்திப்புக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

இந்த நிலையில், வர்த்தகம் முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக புதிய அதிபர் சீனாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

சீனாவிடம் இலங்கையின் கோரிக்கை

சீனா தொடர்பில், புதிய அரசாங்கத்தின் கொள்கையில் எந்த அடிப்படை மாற்றமும் ஏற்படாது. ஆனாலும், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறைக்கு உதவுமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பிலும் ஹம்பாந்தோட்டையிலும் சீனாவின் ஆதரவுடன் கூடிய பரந்த துறைமுகத் திட்டங்களுக்கு மேலதிக முதலீட்டை மேற்கொள்வதன் மூலம் பீய்ஜிங், இலங்கைக்கு உதவ முடியும்.

நிதி உதவிக்கு அப்பால், எரிபொருள், உரம் மற்றும் பிற அவசர தேவைப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கும் சீனா உதவ முடியும்” என்றார்.

 

 

-ibc