கோட்டாபயவிற்கு இலங்கையில் சட்டப்பூர்வ பாதுகாப்பு இல்லை – அஜித் பெரேரா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாடு திரும்புவதற்கான உரிமை உள்ளது, எனினும், அவருக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற அஜித் பி பெரேரா இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கோட்டாபய ராஜபக்ச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியளார் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு நாடு திரும்ப உரிமை உண்டு. கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டின் குடிமகன், அவருக்கு தனது தாய்நாட்டிற்கு திரும்ப உரிமை உண்டு.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை

இந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது. எவ்வாறாயினும், நிதி துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்காக அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அஜித் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

அவரது பெற்றோரின் நினைவுச் சின்னத்திற்காக அரசு நிதியை செலவிட்டதாக அவர் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்குகள் மீண்டும் தொடர வேண்டும். அத்துடன் பிற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவருக்கு சட்டப்பூர்வ விதிவிலக்கு இல்லாததால், அவர் விசாரணைகளை எதிர்கொள்ளவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு தண்டனை வழங்கவும் முடியும் என்று அவர் கூறினார்.

 

 

-tw