காரணமின்றி கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்: சஜித் வலியுறுத்தல்

காரணமின்றி கைது செய்யப்பட்டவர்களை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

அரசின் எதேச்சதிகார செயற்பாடு

அவர் மேலும் தெரிவிக்கையில்,“தமது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்கள் பலர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த எதேச்சதிகார செயற்பாடு எதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது என்பதை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.

சர்வகட்சிக்கு எவ்வாறு ஆதரவளிப்பது?

ரணில் – ராஜபக்ச அரசு, அரச பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்திய வகையில் மக்களை எதேச்சதிகார ரீதியாக கைது செய்து வருகின்றது.

சர்வகட்சி வேலைத்திட்டத்துக்கு அரசு ஆதரவைக் கோரும் அதேவேளை, எதிர்க்கட்சி அதற்கு தயாராக இருக்கும் நிலையில், அரசு இத்தகைய போக்கில் ஜனநாயகமற்ற மற்றும் எதேச்சதிகார செயற்பாடுகளில் ஈடுபடும் பட்சத்தில் நாம் எவ்வாறு இதற்கு ஆதரவளிப்பது?”என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

-tw