சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை வெளியிட மறுக்கும் ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட வேண்டும் என ஜேவிபியின் முன்னாள் சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, சர்வதேச நாணய நிதியத்துடனான பூர்வாங்க கலந்துரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலிடம் நிபந்தனைகள் குறித்து கேள்வி எழுப்பியதாக சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இன்று விக்ரமசிங்கவே அவற்றை வெளிப்படுத்தவில்லை எனவும் சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் அடங்கிய ஆவணம்

அரசாங்கம் ஒப்புக்கொண்ட நிபந்தனைகள் அடங்கிய ஆவணங்களில் கையொப்பமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஏன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவில்லை? இதை ஏன் நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை? இலங்கை அரசாங்கம் என்ன விடயங்களை ஒப்புக்கொண்டது என்பதை உலகம் அறிய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தனியொரு உறுப்பினராக இருந்த போது இந்த உடன்படிக்கை தொடர்பில், அவரே இந்த கேள்வி எழுப்பியதாக தெரிவித்த சமரசிங்க, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி, அந்த நிபந்தனைகளை வெளியிட ஏன் ஆர்வம் காட்டவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

-tw