பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தொடர்ந்தும் இலங்கையின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு – அம்பாறை

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் பெறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய இன்று காலை மட்டக்களப்பு ஆரையம்பதியில் மக்களின் ஆதரவுடன் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நடைபெற்றது.

அத்துடன் இன்று மாலை அம்பாறை மத்திய முகாம் பகுதியிலும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் பேராதரவு

அத்துடன் நேற்றைய தினம் பொலநறுவை தம்புள்ளை, மற்றும் மாத்தளையில் மக்களின் பேராதரவுடன் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இரா.சாணக்கியன், அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

 

-ibc