எங்களின் உயிர் அவர்களின் இரண்டு இலட்சத்திற்கு பெறுமதியா!

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு இழப்பீட்டு அலுவலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ள நிலையில் அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் இரணப்பாளர் ம.ஈஸ்வரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

”வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தேடும் போராட்டம் எட்டு மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது.

சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தித்தான் போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றோம்.

சாட்சியமாக நாங்கள் நின்று தேடலில் ஈடுபட்டு வருகின்றோம்

தொடர்ச்சியான தேடலில் இருந்து வந்த நாம் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வந்தோம். எங்கள் கோரிக்கைக்கு எவரும் செவிமடுக்கவில்லை என்று தான் 5 ஆண்டுகள் வீதியில் இறங்கி போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.

நாங்கள் இராணுவத்திடம் கையளித்தவர்கள், வீடுகளில் வந்து எங்கள் கண்முன்னால் கொண்டு சென்று போனவர்கள், வெள்ளைவானில் வைத்து கடத்தப்பட்டவர்கள், கடலில் வைத்து கைதுசெய்யப்பட்டவர்கள் என எங்களுக்கு முன்னால் நடந்தவற்றைத்தான் சாட்சியமாக நாங்கள் நின்று தேடலில் ஈடுபட்டு வருகின்றோம்.

கையளிக்கப்பட்ட சின்னஞ்சிறுவர்கள் உட்பட கையளித்தவர்களை தேடிக்கொண்டிருக்கின்றோம்.

எமது தொடர் போராட்டதிற்கு ஈடுகொடுக்க முடியாத இலங்கை அரசாங்கம் முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இருக்கும் போதும் இதனைத்தான் கொண்டு வந்தவர் எங்களை முறியடித்து போராட்டத்தினை நிறுத்தினால் எந்த பிரச்சினையும் வராது என்று.

இப்போது இருக்கும் ஜனாதிபதியும் அவர்களுடன் சேர்ந்து எங்களை பந்தடித்துக்கொண்டிருக்கின்றார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கும் வேளையில் நேற்று (10.10.2022) அறிவித்துள்ளார்கள்.

இரண்டு லட்சம் ரூபா பணம்

அரசாங்கம் வெளியிட்டுள்ள கருத்தில் குறித்த ஆளொருவர் காணாமல் போயுள்ளமையை இழப்பீட்டு அலுவலகத்தால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பின் காணாமல் போனமைக்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையை நீக்குவதற்கும், செலுத்தப்படுகின்ற தொகையை 200,000 ரூபா வரைக்கும் அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் காணாமல் போனவர்களின் சாட்சியமாக விளங்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்கள்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. அந்த வாக்கெடுப்பிற்கு ஒரு கண்துடைப்பாகவும் எமது உறவுகளை ஏமாத்தும் விதமாகவும் தாங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை என்பதற்காகவும் தான் இந்த இரண்டு இலட்சத்தினை கொடுத்து ஏமாற்றவுள்ளார்கள்.

எங்களின் உயிர் அவர்களின் இரண்டு இலட்சத்திற்கு பெறுமதியா?

இது எந்த மூலைக்கு காணும் பணத்தினை கொடுத்து உயிரினை இல்லாமல் செய்யும் அரசாங்கத்தின் இந்த செயலினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இறந்தவர்களை நாங்கள் தேடவில்லை

கையில் ஒப்படைக்கப்பட்டவர்களைத்தான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கின்றோம். இறந்தவர்களை நாங்கள் தேடவில்லை.

ஒட்டு மொத்தமாக எட்டு மாவட்டங்களிலும் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். குற்றம் புரிந்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கொண்டுசென்று நீதிமன்றில் நிறுத்தி அதன் பின்னர் என்ன தீர்வு என்பதை நாங்கள் முடிவெடுப்போம். அது மட்டு நாங்கள் தொடர்ச்சியாக போராட்டத்தினை முன்னெடுப்போம்.

நிதிகளை கொடுத்து உறவுகளை இல்லாமல் செய்யும் செயலினை வன்மையாக கண்டிக்கின்றோம் இந்த நிதிகளை அரசின் தேவைகளுக்கு பயன்படுத்துங்கள் எங்கள் உயிர்களை எங்கள் கையில் தருவதற்கான சாட்சியங்களாக நாங்கள் இருக்கின்றோம்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நீதியினை பெற்று தண்டனையினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பததான் எங்கள் ஆசை இதற்காக எல்லோரும் தொடர்ந்து போராடுவோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

-tw