இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம்- வியட்நாமில் உள்ள அகதிகள்

அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வியட்நாம் அரசு திட்டமிட்டுள்ளது. வியட்நாமில் உள்ள அகதிகள், தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கூறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அகதிகளாக நாட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். கடலில் படகுகள் மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். இதற்கிடையே 20 குழந்தைகள், 19 பெண்கள் உள்பட 306 பேர் படகு மூலம் கனடா நாட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பிலிப்பைன்சுக்கும், வியட்நாமுக்கு இடையே கடலில் சென்ற போது சூறாவளியில் படகு சிக்கி மூழ்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த இலங்கையின் கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியது. இதையடுத்து சிங்கப்பூர் அதிகாரிகள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 317 இலங்கை அகதிகளை மீட்டு வியட்நாம் நாட்டுக்கு அழைத்து சென்றனர். மீட்கப்பட்ட இலங்கை அகதிகள், வியட்நாமில் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே இலங்கை அகதிகளை நாட்டுக்கு கொண்டு வர முயற்சி எடுக்கப்படும் என்று இலங்கை கடற்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும் அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வியட்நாம் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் வியட்நாமில் உள்ள அகதிகள், தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கூறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கையில் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ முடியாத சூழல் உள்ளது. எனவே எங்களை அங்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

-mm