இலங்கையில் கடும் குளிர் – இரு குழந்தைகள் பலி

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் குளிருடனான வானிலையினால் காரணமாக இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் – ராஜாஎல பகுதியைச் சேர்ந்த இரண்டரை மாத குழந்தையும், கந்தளாய் – பேராறு பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு குழந்தைகளும் நேற்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் ஒருவர் நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடும் குளிரின் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு, மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த நாட்களில் நிலவும் கடும் குளிரான வானிலை காரணமாக சிறு பிள்ளைகளுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் ஏனைய நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கடும் குளிரில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

-ift