ஐ நாவின் முக்கிய தீர்மானம் – 1.2 பில்லியன் ரூபாவை நிராகரித்தது இலங்கை

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த வாரம் 3.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டமைக்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான, மனித உரிமைகள் பேரவையின்,(UNHRC) அண்மைய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால், 3.4 மில்லியன் டொலர் ( 1.2 பில்லியன் ரூபாய்) ஒதுக்கப்படுவதை இலங்கை எதிர்த்துள்ளதுடன், அதனை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையால்,பல நாடுகள் தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மற்றும் முடிவுகளை செயற்படுத்த உதவுவதற்காக 2023 ஆம் ஆண்டிற்கான, ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கைக்கான இந்த நிதி அமைந்துள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் இந்த ஆண்டு ஒக்டோபரில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எனினும் எந்தவொரு இறையாண்மையுள்ள அரசும் அதன் அரசியலமைப்பிற்கு முரணான, வெளிப்புற பொறிமுறையை ஏற்க முடியாது என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி அந்த நேரத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, ஐக்கிய நாடுகளின், 5ஆம் குழுவின் நிதி ஒதுக்க முன்மொழிவுக்கு, இலங்கையின் பிரதிநிதி எதிர்ப்பை வெளியிட்டத்துடன், அந்த முன்மொழிவையும் நிராகரித்துள்ளார்.

 

 

-tw