இராணுவ அதிகாரிக்கு எதிராக தடை விதித்துள்ள அமெரிக்கா! இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு

இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து வெளியிட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு இலங்கை ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த வழக்கில் இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்த மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சுயாதீனமான நடவடிக்கை. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கரிசனைகளை வெளியிடும்.

“எங்களால் எதனையும் செய்ய முடியாது”

ஆனால் தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் எதனையும் தெரிவிக்காது. இது சுயாதீனமான செயற்பாடு.

அவர்கள் இவ்வாறான விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான சுயாதீன வழிமுறைகளை கொண்டுள்ளனர். இது தொடர்பில் நாங்கள் செய்யக்கூடியது எதுவுமில்லை.

நாங்கள் எங்கள் கரிசனைகளை வெளியிடுவோம். நாங்கள் தொடர்ந்து எங்கள் நிலைப்பாட்டை முன்வைப்போம். ஆனால் எங்களால் எதனையும் செய்ய முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

-tw