இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ரோஹிங்கியா அகதிகளில் ஆதரவற்ற பல சிறுவர்கள்:சர்வதேச செஞ்சிலுவை சங்கம்

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு அண்மையில் கரைக்கு கொண்டுவரப்பட்ட ரோஹிங்கியா அகதிகளில் ஆதரவற்ற பல சிறுவர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்,சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் கள மதிப்பீட்டைத் தொடர்ந்து, மியன்மாரில் இருந்து 49 சிறுவர்கள் உட்பட 105 இடம்பெயர்ந்தவர்களை இலங்கை கடற்படை பொறுப்பேற்றது.

இதில் 26 பெண்கள், 30 ஆண்கள் என்று 56 பேரும் உள்ளடங்கியுள்ளனர்.

மொழித் தடை

இந்தநிலையில் குறித்த சிறுவர்களில் 21 ஆதரவற்ற குழந்தைகள் (8 சிறுவர்கள், 13 பெண்கள்) மற்றும் 1 முதியவர் (68 வயது) ஆகியோரும் அடையாளம் காணப்பட்டனர். வந்தவர்களில் மூவரின் (2 சிறுவர்கள், 1 பெண்) உடல்நிலை மோசமடைந்திருந்தமையால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இடம்பெயர்ந்த மக்களுடன் நிலைமையைப் புரிந்துகொள்வதற்காக தொடர்புகொள்வதில் மொழித் தடை மிகவும் குறிப்பிடத்தக்க தடையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

தடுப்பு முகாமில் ஆதரவற்ற குழந்தைகள்

கம்பஹா மாவட்டத்தின் வெலிசரவில் உள்ள குடிவரவு தடுப்பு முகாமில் ஆதரவற்ற குழந்தைகள் உட்பட மொத்தம் 22 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

யு.என்.எச்.சி.ஆர் இரண்டு குடியிருப்புகளை வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளது, இதனையடுத்து பெண்கள் மற்றும் சிறுவர்கள், அவர்களது தற்போதைய இடத்திலிருந்து கூடிய விரைவில் சிறந்த தங்குமிடத்திற்கு மாற்றப்படுவார்கள்.  மீதமுள்ளவர்கள் மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மியன்மாரின் ராக்கைனில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை ஏற்றிக்கொண்டு 2022 நவம்பர் 25-27 க்கு இடையில் பல படகுகள் புறப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு படகே இலங்கை கடற்பரப்பில் நிர்க்கதியான நிலையில் இருந்து மீட்கப்பட்டது. இந்த படகும் மற்றும் ஏனைய படகுகளின் பயண இலக்கு, மலேசியா அல்லது இந்தோனேசியாவாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

 

 

-tw