கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையாகும் சட்டம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையாக சட்ட நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை மீறி சட்டவிரோத வேலைக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் மனித கடத்தலில் ஈடுபடுபவர்களை விமான நிலையத்தில் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு சென்று பாதிக்கப்பட்ட 170 பெண்களையும் கடத்தல்காரர்கள் குழுவையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளது.

மோசடி

மேலும், 8 பெண்களும் விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை தொடர்பாக, பொதுமக்களின் பாதுகாப்புக்காக, பயிற்சி, தொழில்நுட்ப அறிவு, பூர்த்தி செய்ய வேண்டிய ஆவணங்கள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்யாமல், பல்வேறு மோசடி முறைகளைப் பயன்படுத்தி தகுதியற்றவர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகின்றன.

எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்து, ஆள் கடத்தலைத் தடுக்கும் வகையில் சட்டரீதியாக இயங்கும் நோக்கில் இந்தப் புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவு

இந்த அமைப்பு அதிக திறன் வாய்ந்த தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு வழிநடத்தும் எனவும், வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸார், ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றின் விமான நிலைய அதிகாரிகளும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குத் தேவையான ஆதரவை வழங்கி வருகின்றனர்.

 

 

-tw