எத்தகைய சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டாலும் பிரயோசனமில்லை

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம், மத்திய வங்கி சட்டமூலம் போன்ற எந்த சட்டமூலங்களை அரசாங்கம் கொண்டு வந்தாலும் பிரயோசனமில்லை.

இறுதியில், இந்நிறுவனங்களில் பணியாற்றும் சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற அதிகாரிகள் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமல், மக்கள் பக்கம் இருந்து சிந்தித்து செயல்படும் போது சிறப்புரிமைக் குழுக்களுக்கு அவர்கள் அழைக்கப்படுவதாகவும், இந்த சிறப்புரிமைக் குழுக்கள் தெரிவுக் குழுக்களின் ஊடாக அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் உயர்ந்து காணப்படும் வரை இந்த சட்டமூலங்கள் எதுவும் பலனளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் நட்புவட்டார முதலாளித்துவம் மற்றும் நட்புவட்டார அரசியல் ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதன் ஊடாக இந்த ஊழல் அரசியல் கலாசார கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு 220 இலட்சம் மக்களினதும் புதிய ஆணையுடன் நாட்டுக்கு பொறுப்புக்கூறும் தூய அரசியல் கலாசார கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தேர்தல்களில் தமது பிரசார நடவடிக்கைகளுக்கு பணத்தைச் செலவழித்த நட்பு வட்டார நண்பர்களுக்கு கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வரிச்சலுகைகள் வழங்கியதால், சீனி மோசடிகள், தேங்காய் எண்ணெய் மோசடிகள், எரிவாயு மோசடிகள், மருந்துப்பொருட்கள் மோசடிகள் போன்ற மோசடிகள் நாட்டில் கடந்த காலங்களில் இடம் பெற்றதாகவும், மல உரக்கப்பலில் கூட லட்சம் வாங்கிய இவர்களால் 2048 இல் கூட நாட்டை மீட்க முடியாது என்றும், இதற்கு புதிய அரசியல் ஆணை தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தவே இவ்வாறான சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டாலும், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு திருடர்களைப் பிடிக்கவோ, பண்டோரா பத்திர மோசடிக்காரர்களை பிடிப்பதற்கோ, நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட தேசிய வளங்களை நாட்டுக்குத் திரும்பப் பெறுவதற்கோ விருப்பமில்லை என்றும், ஜனாதிபதி ரணில் ராஜபக்ச அல்ல ரணில் விக்கிரமசிங்கவே என்பதை நிரூபிக்க நாட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் வளங்கள் நாட்டுக்கே திருப்பி எடுக்கவும் திருடர்களை பிடிக்கவும் வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

-ad