விவசாயத்துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த புதிய திட்டம்

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகள் மூலம் நாட்டின் விவசாயத்துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

விவசாயம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான செயலணியொன்றை உருவாக்கவுள்ளதாக தெரிவித்த அதிபர், பெருந்தோட்ட, நீர்ப்பாசன, மாகாவலி அபிவிருத்தி அமைச்சுக்களை இணைத்து தனியார் துறையின் பங்கெடுப்புடன் மேற்படி செயலணியை நிறுவ எதிர்பார்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

“விவசாயத்துறை நவீனமயப்படுத்தல்” தொடர்பில் அதிபர் அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்ற சந்திப்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதாரத்தின் பிரதான அங்கம்

விவசாய நவீன மயப்படுத்தலுக்கான செயலகமொன்றை ஸ்தாபிப்பதற்கான வரைவு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையொன்றை இரு வாரங்களுக்குள் பெற்றுத்தருமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்திய அதிபர், தேவை ஏற்படுமாயின் அச்செயற்பாடுகளுக்காக நாடாளுமன்ற குழுவொன்றை நியமிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

விவசாயம் இந்நாட்டு பொருளாதாரத்தின் பிரதான அங்கமாக காணப்படுகிறது என சுட்டிக்காட்டிய அதிபர், அதனை அமைச்சு அல்லது சில நிறுவனங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்த முடியாதெனவும், அரச மற்றும் தனியார் துறைகள் உரிய ஒருங்கிணைப்புடன் விவசாயத்தை நவீனமயப்படுத்தும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

புதிய முறை

அதேபோல் பழமையான முறைமைகளுக்கு மாறாக புதிய முறையில் சிந்தித்து சிறந்த பிரதிபலன்களை அடையும் வகையில், விவசாயத்தை நவீனமயப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதிபர் வலியுறுத்தினார்.

இதுவரையில் விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் மாத்திரமே இடம்பெற்றதாகவும், அதனால் நாட்டுக்கு எவ்வித பலன்களும் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அதிபர், உரிய முகாமைத்துவத்தின் கீழ் விவசாய திட்டமிடல்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

 

 

-ib