ரணிலுக்கு ஆதரவளித்திருந்தால் முள்ளிவாய்க்கால் காப்பாற்றப்பட்டிருக்கும்

“2005 ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் முள்ளிவாய்க்கால் பிரச்சினையைத் தடுத்திருக்கலாம் ”எனத் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைப்பு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மாற்றுக் கட்சிகள் விட்ட பிழைகளை சீராக்கி நாட்டை காப்பாற்றிய பொறுப்பு ரணில் விக்கிரமசிங்கவையே சாரும்.

அச் சந்தர்ப்பத்தில் அவர் கைகொடுக்காவிட்டால் சோமாலியாவை விட மோசமான நிலைக்கு இலங்கை சென்றிருக்கும்.

இதேவேளை 2002 ம் ஆண்டு தமிழர்களின் ஆயுத போராட்ட அமைப்பின் ஆயுதத்தை “மௌனித்து பேச்சுவார்த்தை” மூலம் தீர்வு காண செயற்பட்டார்.

இதேவேளை 2005ம் ஆண்டு எமது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களித்திருந்தால் முள்ளிவாய்க்கால் பிரச்சினையைக் கூடத் தடுத்து நிறுத்தியிருப்பதுடன் வடக்கு கிழக்கை ஆண்டு தலைவர்களையும் காப்பாற்றியிருக்கலாம்.

2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடம்பில் செல் துகள்களைச் சுமந்துகொண்டும் பலர் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆகவே, இந் நிலையை மாற்றியமைத்து அபிவிருத்திகளைக் கொண்டுவருவதற்கு சிறந்த தலைவராக ரணில் விக்கிரமசிங்க உள்ளார். தற்போது கல்வி ,சுகாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ளோம்.

எதிர்காலத்தில் படித்த அரசியல்வாதிகள் இருந்தாலே நாட்டைக் காப்பாற்ற முடியும். எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

எனவே கடந்த காலத்தில் அளிக்காத வாக்குகளை நான்கு மடங்குகளாக அதிகரித்து வாக்களிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

 

 

-jv