மருந்தை மாற்றி வழங்கியதால் பலியான பெண்

தனியார் மருந்தகம் ஒன்றில் தவறுதலாக வழங்கப்பட்ட மருந்தை பயன்படுத்திய பெண் ஒருவர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ள சம்பவம் இங்கிரிய பகுதியில் பதிவாகியுள்ளது.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு புற்றுநோயிக்கான மருந்து வழங்கப்பட்டமை காரணமாக அவர் உயிரிழந்ததாக  பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இங்கிரிய  ஊருகல பிரதேசத்தில் வசித்து வந்த 62  வயதான பி.எம்.சோமாவதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சில காலமாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் அவதிப்பட்டு வந்த அவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையின் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்படி, கடந்த 31ம் திகதி அவரது கணவர் மருத்துவமனைக்கு  மருந்துகளை பெற சென்றுள்ளார்.

மருத்துவமனையில் அவருக்கு  சில மருந்துகளை கொடுத்துவிட்டு, கிடைக்காத சில மருந்துகளை தனியார் மருந்தகத்தில் வாங்குமாறு கூறப்பட்டுள்ளது.

அதன்படி இங்கிரிய நகரில் உள்ள தனியார் மருந்தகத்தில் இருந்து பெறப்பட்ட மருந்துகளை சுமார் ஒருவாரம் பயன்படுத்திய போது குறித்த பெண்ணுக்கு சில சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. பின்னர் கடந்த 10ஆம் திகதி திடீரென சுகவீனமடைந்த சோமாவதியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு உறவினர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்போதே மருந்து மாற்றி வழங்கப்பட்டுள்ளமை வைத்தியசாலை தாதி ஒருவரால் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடா்பில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் இங்கிரிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

-ad