சீன ஆய்வுக் கப்பல் இலங்கைக்குள் வருவது உறுதி

சீன ஆய்வுக் கப்பலான ‘சி யான் 06’ கப்பலானது இலங்கைக்குள் பிரவேசிக்க  அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா அமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள சீனத் தூதரகமும் ‘சி யான் 06’  கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

தென் இந்திய பெருங்கடல்  ஆய்வு

இந்நிலையில் குறித்த சீன ஆய்வுக் கப்பலைக் கொண்டு நாரா நிறுவனம் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும், குறித்த கப்பல் இலங்கைக்கு வரும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன ஆராய்ச்சிக் கப்பலான ‘Xi Yan 06’ அக்டோபர் முதல் நவம்பர் வரை கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் நிறுத்தப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கப்பல் தென் இந்திய பெருங்கடல் பகுதி உட்பட விரிவான ஆய்வை மேற்கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், கடல்சார் பாதுகாப்பில் கவனம் செலுத்தி சீன ஆராய்ச்சிக் கப்பலின் வருகை குறித்து இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

-tw