இலங்கை இந்திய பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கான அனுமதி மறுப்பு

தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு, மத்திய நீர்வழி போக்குவரத்து அமைச்சு அனுமதி தர மறுத்துள்ளது.

தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசந்துறைக்கு, விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதற்கு மாநில அரசின் ஒத்துழைப்புடன், மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம், இப்பணியை நேரடியாக மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னார் மற்றும் காங்கேசந்துறைக்கு இரண்டு வழித்தடங்களில் பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க, தமிழக கடல் சார் வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழக சட்டசபையில், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை வாயிலாக, இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த அறிவிப்பை, எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் செயற்படுத்தும் வகையில், நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

இதற்காக, இராமேஸ்வரம் சிறு துறைமுகத்தில் கப்பல் நிறுத்துமிடம் , பயணிகள் தங்குமிடம், சுங்கம் மற்றும் குடியுரிமை பிரிவு சோதனை மையங்கள் அமைக்க, மத்திய நீர் வழி போக்குவரத்து அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், இப்போது அனுமதி வழங்க இயலாது என, அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முன் அனுமதி பெறாமல் திட்டம் அறிவித்தது தான், இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இருப்பினும், தமிழக கடல் சார் வாரியம், அனுமதிக்கான தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 

 

-tw