கடுமையான பொருளாதார மறுசீரமைப்பு அவசியம்

நாட்டின் பொருளாதார ஸ்தீர நிலையை ஏற்படுத்த கடுமையான பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புதிய பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பிற்குள் சகலரதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் ஊடாக வீழ்ச்சியடையாத வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (28) ஆரம்பமான 2023 இலங்கை பொருளாதார மாநாட்டின் ஆரம்ப உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது.

கடந்த ஒரு வருடத்தில் அரசாங்கம் மேற்கொண்ட கடுமையான பொருளாதார மறுசீரமைப்பு மூலம் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையில்,

இந்த நாட்டின் பொருளாதார மீட்சிக்காக கடந்த வருடத்தில் நாம் முன்னெடுத்த வேலைத்திட்டத்தை பொருளாதார மறுசீரமைப்பு என்று கூற முடியுமா என தெரியவில்லை.

மறுசீரமைப்பு என்ற வார்த்தையின் அர்த்தத்தை பார்த்தால் சில வாரங்களுக்கு முன்னர் பொருளாதாரத்திற்கு நாம் மேற்கொண்டது மறுசீரமைப்பு அல்ல. இது ஒரு முழுமையான மீளமைப்பு அல்லது ஒரு தீவிர மறுசீரமைப்பு என்று சொன்னால் தவறில்லை. எம்மால் திரும்பிச் செல்ல முடியாது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது நாம் வேலை செய்ய வேண்டும். இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான இந்த ஆழமான பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளில் நாம் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்தது.

கடந்த சில மாதங்களில், எமது நாட்டிலுள்ள அனைத்து கடன் வழங்குநர்களுடனும் முழுமையான நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். இலங்கையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லெண்ணம் காரணமாகவே இந்தச் செயற்பாட்டில் வெற்றிபெற முடிந்தது.

இலங்கையில் கடன் மறுசீரமைப்புக்கு கொள்கையளவில் உடன்பாடு வழங்கிய முதலாவது வங்கி சீனா எக்ஸிம் வங்கியாகும். உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு மிக விரைவில் கொள்கையளவில் இதேபோன்ற உடன்பாட்டை வழங்கும் என்று நம்புகிறோம்.

மேலும், எதிர்வரும் டிசம்பரில் இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் முதல் மீளாய்வை சர்வதேச நாணய நிதியம் நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

-ad