இராகவன் கருப்பையா – ‘நல்லத் தமிழுக்கு மின்னலைக் கேளுங்க,’ என மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர்கள் அவ்வப்போது செய்யும் அறிவிப்புகள் முற்றிலும் உண்மை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இனிமையானத் தமிழை அன்றாடம் கூறுபோடும் தனியார் வானொலியொன்றுடன் ஒப்பிடும் போது, மின்னல் பண்பலையைச் சேர்ந்த அறிவிப்பாளர்களின் உச்சரிப்பில் எவ்வித குளறுபடியும் இல்லை என்பது பாராட்டுக்குரியது.
தமிழ் மொழியை அவ்வளவு சிறப்பாக, அதற்கே உரிய பாணியில் மிகவும் இனிமையாக, மொழி வளம் கெடாமல் உச்சரித்து, தமிழ் ஆர்வளர்களை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சிகளைப் படைக்கின்றனர்.
ஆனால்…. வானொலி நேயர்கள் எப்படி வாழ வேண்டும் என ‘வாழ ஆலோசனை கொடுப்பது’ தேவையில்லாத ஒரு அதிகப்பிரசங்கித்தனம் என்றே நமக்குத் தோன்றுகிறது.
அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். அதாவது நிகழ்ச்சிகளைத் தரமாக, மேலும் சிறப்பாக, நேயர்களுக்கு ஏற்புடையதாக, அதிகம் பயனுள்ளதாகப் படைப்பது குறித்து அவர்கள் ஆராய வேண்டும்.
காலை வேளைகளில் அவர்கள் படைக்கும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் சிறப்பாகத்தான் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
குறிப்பாக அரசாங்க உயர் அதிகாரிகளை வரவழைத்துப் பேட்டி காண்பதானது சம்பந்தப்பட்ட இலாகா எப்படி செயல்படுகிறது, அந்த இலாகாவின் சேவைகளினால் மக்கள் எப்படி பயனடைய முடியும் போன்ற விவரங்கள் அத்தியாவசியமான ஒன்றுதான்.
அதே போல தனியார் துறையில் சிறந்து விளங்குபவர்களையும் பேட்டி கண்டு தகவல்களை வழங்க முற்படுவது சுவாரஸ்யமாகவும் பயன் மிக்கதாகவும் உள்ளது.
எனினும் வானொலி நேயர்களுக்கு புத்திமதி சொல்லும் வகையில் இடையிடையே ஒரு குட்டி நாடகத்தை அரங்கேற்றி, ‘இப்படிக்கு மின்னல் எஃப்.எம்.’ என்று நிறைவுபெறும் ஒலிபரப்புகள் நமக்கு எரிச்சலூட்டுகின்றன.
“அடுத்தவர்களுடன் போட்டி போடுவதற்காக புதிய கைக் கடிகாரம், புதிய கார் போன்றவற்றை வாங்குவார்கள். ஆனால் கையில் 10 ரிங்கிட் கூட இருக்காது. விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டாமா? இப்படிக்கு மின்னல் எஃப்.எம்.”
“ஒரு திரைப்படத்தின் ‘ட்ரெய்லர்’ எனப்படும் முன் விளம்பரத்தை மட்டும் பார்த்துவிட்டு ‘படம் நல்லாயில்லை, அதைப் பார்க்க வேண்டாம்,’ என மற்றவர்களைத் தடுக்கக் கூடாது. இப்படிக்கு மின்னல் எஃப்.எம்.”
“வாகனம் ஒட்டும் போது டிக் டொக்’ பார்க்கக் கூடாது, அங்கும் இங்கும் பார்க்கக் கூடாது, சாலையைத்தான் பார்க்க வேண்டும். இப்படிக்கு மின்னல் எஃப்.எம்.”
பிரிதொரு ஒலிப்பதிவில், நன்றாகத் தமிழ் பேசும் ஒரு சிறுமி பாராட்டப்படுகிறார். பிறகு தீடீரென அவர் ஆங்கிலம் பேசும் போது, “அவரை தமிழ் பள்ளிக்கே அனுப்பியிருக்கலாமே,”என்று கூறிவிட்டு, ‘இப்படிக்கு மின்னல் எஃப்.எம்.’ என்கிறார்கள்.
ஆக, இப்படியெல்லாம் புத்திமதி சொல்லும் குட்டி நாடகங்களை அரங்கேற்றி அவற்றுக்கு உரிமைக் கொண்டாடும் மின்னல் பண்பலையின் போக்கானது, வானொலி நேயர்களை தரம் தாழ்த்தி எடை போடுவதற்கு சமமாக உள்ளது.
இத்தகைய கேலிக் கூத்துகளை அவர்கள் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். நம் சமூகத்தினரின் புத்திசாலித்தனத்தையும் சிந்தனை ஆற்றலையும் உரசிப் பார்க்கும் வகையில் அவைகள் உள்ளன.
“இப்படிப்பட்ட சிறிய விஷயங்கள் கூட நமக்குத் தெரியாதா என்ன? இவர்கள் யார் நமக்கு புத்திமதி சொல்ல,” என்று வானொலி நேயர்கள் ஆதங்கப்படுவதில் நியாயம் இருக்கவேச் செய்கிறது.