இராகவன் கருப்பையா- ஆளும் பி.கே.ஆர். கட்சியில் முடுக்கிவிடப்பட்ட தலைமைத்துவ மாற்றத்தினால் 2 முக்கிய அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தை அம்னோவைச் சேர்ந்த ஒருவர் மேலும் மோசமாக்கியுள்ளார்.
அனைத்துலக தொழில்துறை அமைச்சரான அம்னோவின் தெங்கு ஸஃப்ருல், பி.கே.ஆர். கட்சியில் சேரவிருப்பதாக அண்மைய காலமாகவே செய்திகள் வெளிவந்த வண்ணமாக இருந்த போதிலும் கடந்த வாரத்தில் அவர் மேற்கொண்ட நகர்வானது, ‘குழம்பியக் குட்டையில் மீன் பிடிப்பதைப் போலவே உள்ளது.
பொருளாதாரத் துறை அமைச்சர் ரஃபிஸியும் இயற்கைவள சுற்றுப்புற சூழல் துறைக்கான அமைச்சர் நிக் நஸ்மியும் கடந்த வாரம் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தது நாம் எல்லாரும் அறிந்ததே.
இதனால் பி.கே.ஆர். கட்சி சற்று ஆட்டங்கண்டுள்ள சூழலில் பலவிதமான யூகங்கள் வலுத்த வண்ணமாக இருக்கும் பட்சத்தில் ஸஃப்ருல் உள்ளே நுழைய எத்தனிப்பது நமக்கெல்லாம் வியப்பளிக்கிறது.
அடிப்படையில் ஸஃப்ருல் ஒரு அரசியல்வாதியே கிடையாது. கடந்த 2020ஆம் ஆண்டில் முஹிடின் யாசின் கொல்லைப்புறமாக நுழைந்து நல்லாட்சியைக் கைப்பற்றி அவசர அவசரமாக அமைச்சரவையை அமைத்த போது இவரும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
சி.ஐ.எம்.பி. பொருளகத்தின் தலைமை செயல்முறை அதிகாரியாக இருந்த அவரை மேலவை உறுப்பினராக நியமனம் செய்து நிதியமைச்சின் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார் முஹிடின்.
அவர் ஒரு அதிர்ஷ்டசாலி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அரசியல் பின்னணியோ அனுபவமோ இல்லாத அவரை சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து பிரதமராகப் பொறுப்பேற்ற சப்ரியும் தனது அரசாங்கத்தில் சேர்த்துக் கொண்டார்.
பிறகு 2022ஆம் ஆண்டில் பெர்சத்து கட்சியிலிருந்து அம்னோவுக்குத் தாவிய அவருக்கு 15ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
எனினும் சிலாங்கூர், கோலசிலாங்கூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியைத்தான் தழுவினார். இருந்த போதிலும் சிபாரிசின் பேரில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என அப்போது கூறப்பட்டது.
இப்போது அம்னோவிலும் நிலைத்திருக்காமல் பி.கே.ஆர். கட்சிக்குத் தாவ முடிவு செய்துள்ள அவரை அம்னோ தலைவர்கள் மானாவாரியாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.
பி.கே.ஆர். கட்சியில் குழப்பம் நிலவுகிற வேளையில் அக்கட்சிக்குள் நுழைய அவர் எடுத்துள்ள முடிவானது, அவரை ஒரு சுயநலவாதியாகக் காட்டுகிறது. “ஆவர் ஒரு சந்தர்ப்பவாதி,” என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஃபுவாட் வருணித்தார்.
“எங்கள் உறுப்பினர்களைத் தொடக் கூடாது,” என அம்னோ தலைமைச் செயலாளர் அசிராஃப், பி.கே.ஆர். கட்சிக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். “கூட்டணிக்குள்ளேயே உறுப்பினர்களை இப்படி வசீகரம் செய்வது முறையற்ற செயலாகும்,” என்றார் அவர்.
“பி.கே.ஆர். கட்சியுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும்,” என்று கூட அம்னோவைச் சேர்ந்த சில குட்டித் தலைவர்கள் சினம் கொண்டு கூக்குரலிட்டனர்.
இவ்விஷயம் குறித்து கருத்துரைத்த அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான அஹ்மாட் ஸாஹிட், “ஸஃப்ருலை பி.கே.ஆர். கட்சி ஏற்றுக்கொண்டால் அது ஒரு நெறியற்றச் செயல்,” என சற்றுக் கடுமையாகவே சாடினார்.
நிலைமை இவ்வாறு இருக்க, இது குறித்து தாம் இன்னும் ஒரு முடிவும் எடுக்கவில்லை என பிரதமர் அன்வார் குறிப்பிட்டது நமக்கு சற்று வியப்பாகவே உள்ளது.
குடும்பத்திற்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்துவதைப் போலான இத்தகைய ஒரு செயலை முற்றாகத் தவிர்ப்பதே விவேகமான ஒரு முடிவாக இருக்கும் என்று நமக்குத் தோன்றுகிறது.
பிரிதொரு கோணத்தில் பார்ப்போமேயானால், ரஃபிஸி அல்லது முன்னாள் அமைச்சர் கைரி போன்றோரோடு ஒப்பிட்டால், ஸஃப்ருலுக்கு அவ்வளவாக ஆரசியல் ஆளுமையோ தலைமைத்துவ பண்புகளோ இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இவருக்காக இரு ஆளும் கட்சிகளுக்கிடையே உறவுகள் பாதிக்கும் வகையில் அன்வார் முடிவெடுப்பாரா அல்லது வேறு ஏதாவது யோசனையை முன் வைப்பாரா என்று அநேகமாக வரும் வாரங்களில் நமக்குத் தெரிந்துவிடும்.