பாரிசானின் (தமிழ்) கொலை முயற்சி!

BN_ec_bannersதமிழ் மொழி 5 ஆயிரம் வருடத்திய ஒரு முதிர்ந்த மொழி. அதன் பயன்பாடுகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலெல்லாம் பரவி தளிர் விட்டு கொடியாய் படர்ந்திருக்கின்றது. நமது மலேசிய மண்ணிலும் அதன் மணம்  இனிதே வீசிக் கொண்டிருக்கின்றது.

இவ்வேளையிலே, தேர்தல் கூடிய விரைவில் நடைபெறவிருப்பதால் ஆளும் கட்சிகளும் எதிர்கட்சிகளும்  மும்முறமாக போட்டிப் போட்டுக் கொண்டு மக்களை தங்கள் பக்கம் வாக்களிக்க பல யுக்திகளை கையாண்டுக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் நாடு முழுவதுவும் தங்களின் கட்சிக் கொடிகளை பறக்கவிடுவது.

அந்த வகையிலே, பாரிசானின் நீல வண்ணக் கொடிகள் நாடு முழுவதும் தொங்க விடப்பட்டு, “வானகம் கீழே வையகம் மேலே” என்ற பாட்டுக்கிணங்க எங்கும் நீலமயமாய் காட்சியளிக்கின்றன.

மலாய், சீனம் ஆங்கிலம் தமி(ல்) மொழியிலும் அதன் வாசகங்கள் வெண்ணிறத்தில் பார்ப்போரை தூரத்திலிருந்தே படிக்கச் தூண்டுமளவுக்கு பளிச்சென்று தோன்றுகின்றன.

சீன மொழியைத் தவிர்த்து மற்ற மொழிகளை அறியும் ஆற்றல் நமக்கிருப்பதால், மற்ற மொழி வாசகங்கள் சரியாக எழுத்துப் பிழையின்றி இருக்கும் பட்சத்தில் தமிழ் மொழிக்கு மட்டும் ஏன் இந்த முடம் என்று ஏங்குகிறோம்.

ஆம் அதன் வாசங்கள் இப்படித்தான் எழுதப்பட்டிருந்தன;

BN_ec_banners02“தேசிய முன்னனிக்கே வாக்கனியுங்கள்” முன்னணிக்கே என்பதை முன்னனிக்கே என்றும், அளியுங்கள் என்று இருக்கவேண்டியதை, அனியுங்கள் என்றும் தமிழிலே இல்லதா புதிய வார்த்தைகளைக் கண்டு பிடித்த இவர்களை நோபல் பரிசு கொடுத்து பாராட்டுவதா அல்லது பாறையை போட்டு கொல்வதா என்று தெரியவில்லை.

தமிழ் மொழியை பற்றி அக்கறை இருந்திருந்தால், இதனை அச்சிட்டவர்கள் நிச்சயம்  எழுத்துப் பிழைகள் இருக்கின்றனவா என்று சரி பார்த்தப் பிறகே அச்சிட்டிருப்பார்கள். இல்லையெனில் அரை குறை தமிழ் வித்வான்களை வைத்து இந்த சுலோகத்தை எழுதியுருந்ததால்தான் இது போன்ற மொழிக் கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது.

இந்த தவற்றுக்கு யார் காராணம் ?

பாரிசானில் மூன்றாவது பங்காளியாக இருக்கும் ம.இ.கா ஏன் இந்தப் பிழையைத் திருத்த நடவடிக்கை எடுக்கவில்லை? சரவணன் போன்ற தமிழ்மொழி பற்றுள்ள அமைச்சர்கள் பாரிசான் அரசில் இருந்தும் கூட, இந்த தவறு நடக்கலாமா ?

நிச்சயம் இந்த தவற்றை பலர் பார்த்து , சம்பந்தப்பட்டவர்களிடம் சுட்டிக் காட்டியிருப்பார்கள் ? இருந்தும் இன்னும் அதனை அகற்றும் நடவடிக்கையில் பாரிசான் அரசு ஏன் துரிதம் காட்டவில்லை ?

சின்ன எழுத்துப் பிழைதானே அதற்கு ஏன் இந்த பரபரப்பு என்று வாளாயிருக்கின்றார்களா ? அல்லது ம.இ.காவின் தலை எழுத்தே மாறப் போகின்ற இந்த தேர்தலில் இந்த சாதாரண “னி” “ளி” எழுத்துக்கள் தானே, இதை மாற்றி மட்டும் என்ன ஆகப்போகிறதென்று பேசாமல் இருக்கின்றார்களா ?

நாம் இப்பொழுது வேண்டிக் கொள்வதெல்லாம் யாருடைய தலை எழுத்து எப்படி போனாலும் பரவாயில்லை ! நமக்கு அதைப் பற்றி  கவலையும்  இல்லை  ஆனால் தமிழ் மொழி சிதைவதை தமிழர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.

தமிழ்த் தாய் உங்களை மன்னிக்கவும் மாட்டாள். தமிழ் கொலைக்கு தண்டணை என்ன தெரியுமா ? தேர்தலில் மக்கள் உங்களுக்கு தூக்குத் தண்டனை கொடுத்தாலும் கொடுத்து விடுவார்கள் ! ஜாக்கிரதை!

கோவிந்தசாமி அண்ணாமலை, தஞ்சோங் மாலிம்

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும், உள் மனதின் குமுறல்களையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272