பணிந்து போன காலம் போய்விட்டது; துணிந்து முடிவெடுக்க வேண்டும்!

hindraf2008ல் தேர்தலில் நமது தாக்கத்தினால்தான் தேசிய முன்னணி ஆராசாங்கம் 2/3  பெரும்பான்மையை இழந்தது என்பதை அனைவரும் அறிவர். நமது பங்கு என்ன, நமது சக்தி என்ன என்பதை அரசாங்கம் உணர்ந்திருக்கனும் ஆனால் அப்படி நடைபெறவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் நமது பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனர். இதற்கு காரணம் தேர்தல்.

பல கோணங்களில் நமது மக்கள் சிந்திக்க வேண்டும். கீழே சிலவற்றை உங்கள் முன் வைக்கின்றேன். சிந்தித்துப் பாருங்கள்.

1. வேலை வாய்ப்பு: நமக்கு அரசாங்கத் துறையில் வேலை வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன? தலைமைத்துவப் பதவிகளுக்குத் தகுதி இருந்தும் நமக்கு அப்பதவிகள் தருவதில்லை. எந்த அரசு அலுவலகத்திலாவது தலைமை பொறுப்பினை நமக்கு வழங்கப்பட்டுள்ளதா? தலைவர்கள் அதுவும் அமைச்சர் நிலையில் உள்ள நமது தலைவரே கூறியுள்ளதை செவிமடுத்துள்ளேன். “என்னங்க பண்ணுறது எல்லா இடத்திலும் அவங்கதான் இருக்காங்க” இது அமைச்சரின் வாய்மொழி. இது போல் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒரு கருத்தை கூறினார். “எல்லாம் சண்டை போட்டுத்தான் கேட்க வேண்டியுள்ளது.” இதுதான் நமது நிலை.

2. கல்வி வாய்ப்பு: அனைத்துச் சமூகத்தையும் சமமாக பார்க்கிறோம் என்று ஒரே மலேசியா சுலோகத்தைக் கூறிக்கொண்டு இருக்கிறார்களே அப்படி சமமாக பார்க்கிறார்களா? கல்வியில் எதற்கு இனவாரியான பாகுபாடு.

அண்மையில் எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் வந்த போது நமது பிள்ளைகளில் பலர் தான் விரும்பிய துறையில் படிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போனதை எத்தனை பெற்றோர் அறிந்திருப்பர் என்று தெரியவில்லை. மொத்தம் 211 துறைகள் விளம்பரம் செய்யப்பட்டன. அதில் சில தவிர்த்து மற்ற அனத்தும் பூமிபுத்ராவிற்கு மட்டும் என உள்ளது. உதாரணத்திற்கு பிஸியோதிராபி (physiotherapy) துறையில் ஆர்வம் கொண்ட பல நமது பிள்ளைகள் தனியார் பல்கலைக்கழகங்களை நாட வேண்டியுள்ளது. காரணம் அரசாங்க கல்லூரிகள் பூமிபுத்ராவிற்கு மட்டுமே இப்பயிற்சியை வழங்குகின்றன. இதனை நமது ம.இ.கா. தலைவர்கள் கண்டுகொண்டனரா?

tamil_school3. தமிழ்க்கல்வி: ஒவ்வொரு ஆண்டும் தமிழ்மொழி பாடம் தொடர்பான சர்ச்சைகள் எழுகின்றன. நிரந்தர தீர்வு காணப்படுவதிலை. காரணம் நாம் ஏமாளிகள். தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் இந்திய மாணவர்கள் எடுக்கலாம் – தடையில்லை என பிரதமர் அறிவித்தவுடன் நமது தலைவர்கள் பாராட்டு மாலைகளை சூட்டினர்.

ஆனால் இப்பாடங்களில் மிகச்சிறந்த தேர்ச்சிப் பெற்றாலும் அரசாங்க உபகார சம்பளத்திற்கு தகுதியற்றவை என்பதை எத்தனை பேர் அறிவர். தமிழ்ச் சார்ந்த மேற்படிப்புக்கு மட்டுமே இப்பாடங்கள் துணைபுரியும். இங்கும் நமக்கு ஏமாற்றம்.

4. தமிழ்ப்பள்ளிகள்: தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதியுதவி பெற்றுத் தந்ததாக கூக்குறலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிதி கிடைத்தது உண்மைதான். பேராக்கில் நான்கு ஆண்டுகளுக்கு முன் வழங்கிய நிலம் இன்னும் காடாகவே உள்ளது. 2012ல் வழங்கப்பட்ட 100 மில்லியன் இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. 2013ல் வழங்கிய 100 மில்லியன் நிதிக்கு இன்னும் சுழி போடவில்லை.  கிடைத்த நிதியினால் இந்திய சமூகம் அடைந்த நன்மை என்ன?

20,000 ரிங்கிட் வழங்கப்பட்டால் 8,000 ரிங்கிட் பெறுமான பணிகள் செய்யப்படுகின்றன. ஒன்று மட்டும் உண்மை நமது தமிழ்ப்பள்ளிகளால் பூமிபுத்ரா குத்தகையாளர்கள் பெரும் இலாபம் அடைகின்றனர். எத்தனை இந்திய குத்தகையாளர்கள் நன்மை அடைகின்றனர்?

5. கடனுதவி: அண்மையில் நண்பர் ஒருவர் தனது உற்பத்தி வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக பலரை நாடி அங்கும் இங்கும் அலைந்து தெக்குன் கடனுதவிக்கு விண்ணப்பித்தார். பல முறை கேட்ட பிறகு பல மாதங்களுக்குப் பிறகு வெற்றிப் பெறவில்லை என்று பதில் வந்தது . காரணம் கேட்ட போது உங்கள் உற்பத்தி தொழில் எங்கள் பட்டியலில் இல்லை என்பதாகும். சாம்பிராணி ஊதுபத்தி தொழில் அவர்கள் பட்டியலில் இல்லை. நமது சிறு வர்த்தகர்கள் படும் பாடு குறையவில்லை.

indians26. அரசாங்க நிலங்கள்: அரசாங்க நிலத்தில் குடியிருக்கும் நமது சமூகத்தினருக்கு பல போராட்டங்களுக்குப் பிறகுதான் நிலப்பட்டா வழங்கப்படுகிறது. சில இடங்களில் அதனையும் கூறு போட்டு தமக்குச் சொந்தமாக்கிய தலைவர்களும் உண்டு. சில இடங்களில் இவ்வாறு இந்தியர்கள் குடியிருக்கும் பகுதிகளில் மலாய்காரர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. எங்கப் பார்த்தாலும் அடிதான்.

இப்படி அல்லோலப்படும் நமது சமூதாயத்தின் குரல் செவிமடுக்கப்படுக்கிறதா? செவிமடுக்க நாம் என்ன செய்ய  வேண்டும். நமது சக்தியை வெளிபடுத்த வேண்டும்.

56 ஆண்டுகள் அடிமையாக, கூனி குறுகி வாழ்ந்து வந்துள்ளோம். நமது சக்தியை ஒன்று திரட்டி பாடம் புகுத்த வேண்டும். மாற்றம் கொண்டு வரவேண்டும். நம்மை அவர்கள் மதிக்க வேண்டும் நமக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும். இதுதான் தருணம். மாற்றத்தைச் செய்வோம்.

நான் எதிர்கட்சிகள் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்கு இதனைக் கூறவில்லை. அவர்களுக்கும் பயத்தை கொடுக்க வேண்டும். 56 ஆண்டுகள் கழித்து விட்டோம். இன்னும் 5 ஆண்டுகள் பார்ப்போம், இவர்களும் மாற்றத்தைக் கொண்டு வரவில்லை என்றால் களை எடுப்போம்.

பணிந்து போன காலம் போய்விட்டது. துணிந்து முடிவெடுக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் மனதை தொட்டு கேட்டு பாருங்கள். நமது சமூகத்திற்கு இந்நாட்டில் என்ன மரியாதை வழங்கப்படுகிறது என்பதை. மானமுள்ள மனிதனாக வாழ ஆசைப்படுங்கள்.

எஸ். வேலன், நெகிரி செம்பிலான்

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும், உள் மனதின் குமுறல்களையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272