எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே – கோவிந்தசாமி அண்ணாமலை

govinthasamy annamalaiநமது கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது கூறியவை இவை

* கல்வி சார்ந்த விவகாரத்தில் அரசாங்கம் இந்திய மாணவர்களை ஏமாற்றவில்லை.

* கடந்த ஆண்டு 1500 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. இந்த ஆண்டும் அதே போல 1500 இடங்கள் பூர்த்தி செய்யப்படும்.

* இந்திய மாணவர்களின் கோட்டாவை பூர்த்திசெய்வதற்காக 92 முதல் 95 விழுக்காடாக இருக்கும் விண்ணப்பத்தகுதியை குறைக்க வேண்டிய நிலைக்கு கல்வி அமைச்சு ஆளாகியிருக்கின்றது.

* மாணவர்கள் எண்ணிக்கை குறைத்துள்ளதற்கான காரணம் பெரும்பாலான இந்திய மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை.

* சரியானவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வின்ணப்பங்களை சல்லடை செய்துள்ளோம். அதில் பெரும்பான்மையோர் விண்ணப்பத் தகுதியை பூர்த்தி செய்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

* ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறவேற்றுவதற்காகவும் கோட்டாவை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும் கல்வி அமைச்சு செயல் பட்டுக்கொண்டிருக்கின்றது.

முதலில், சென்ற ஆண்டு 1,500 இடங்கள் பூர்த்தி  செய்யப்பட்டு விட்டது என்ற கல்வி அமைச்சர் கூறியது இன்று வரை உறுதிப்படுத்தப் படாமலேயே இருக்கின்றது .

இன்னுமொறு குற்றச்சாட்டும் கல்வி அமைச்சர் சொன்ன செய்தியில் இருக்கின்றது. அதாவது தகுதியுள்ள இந்திய மாணவர்கள் குறைவாக இருப்பதால் , நுழைவுத் தகுதியைக் குறைத்து அதிக இந்திய மாணவர்கள் சேருவதற்காக கல்வி அமைச்சு செயல் பட்டுக்கொண்டிருக்கின்றதாம்.

இதில் விந்தையென்னவென்றால், கல்வி அமைச்சு மிகவும் உயர்ந்த தேர்ச்சி அடைந்த மாணவர்களை மட்டுமே மெட்ரிகுலேசனில் சேர்க்கும் இலக்கைக் கொண்டுள்ளது என்பதுதான்.

உண்மையில் மெட்ரிகுலேசன் என்பது 2 பிரிவுகளாக செயல் படுகிறது என்பது எத்தனை வாசகர்களுக்கு தெரியும்?

ஒன்று 1 வருட படிப்பு , மற்றொன்று 2 வருட படிப்பு. 2 வருட படிப்பு என்பது பூமிபுத்ரா மாணவர்களுக்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது. 1 வருட படிப்பில் பூமி புத்ரா/ பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் பயிலாலாம். SPM நன்கு தேர்ச்சி பெறாத மலாய் மாணவர்களுக்கு அவர்கள் மட்டுமே இந்த 2 வருட படிப்பை பயிலமுடியும்.

கல்வி அமைச்சர் பேசிய பேச்சிலிருந்து, இந்திய மாணவர்கள் மட்டுமே மெட்ரிகுலேசனில் சேர தகுதியான மதிப் பெண்களைப் பெற்றிருக்கவில்லை, ஆகவே அவர்களுக்காகவே இந்த தகுதி தளர்த்தப் படுகிறது என்கின்ற ஒரு   குற்றச்சாட்டு தெரிகிறது. உண்மையில் இந்த தகுதித் தளர்வு மாலாய்க்கார மாணவர்களுக்கு ஏற்கனவே உள்ளது என்பதனை அவர் சொல்லவில்லை..

ஆகவே மெட்ரிகுலேசன் என்பது சிறந்த மாணவர்களுக்கென உருவாக்கப்பட்டதல்ல மாறாக மலாய் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல ஒரு குறுக்கு வழியாக உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது. STPM தேர்வு கடிமானதாலும் அது பொது பரிட்சை என்பதாலும் , அதிகமான மலாய் மாணவர்கள் அந்தப் பரீட்சையில் தோல்வி காண்பதாலும் அரசாங்கம் மெட்ரிகுலேசன் கல்வி வழி , அவர்களை பல்கலைக் கழகத்திற்கு அனுப்புகிறது என்பதுதான்  உண்மை.

அந்த சலுகை துன் மஹாதீர் அவர்களின் கருணையால் நமக்கும் இடையில் வழங்கப் பட்டது.  நிலவரம் இப்படி இருக்க கல்வி அமைச்சர்  நமது இந்திய மாணவர்கள் அதற்குறிய தகுதியைக் கொண்டிருக்கவில்லை , ஆகவே நுழைவுத் தகுதி தளர்த்தப் படுகிறது என்று கூறி நமது மாணவர்கள் மட்டுமே குறைபாடு உள்ளவர்களென்று குறி வைத்து மட்டம் தட்டுகிறார்.

பரவாயில்லை , போகட்டும் அவர் சொல்வது போல இந்திய மாணவர்கள் போதிய தகுதிகளைப் பெற்றிருக்க வில்லை என்ற வைத்துக் கொள்வோம் . இப்படி தகுதி குறைந்த இந்திய மாணவர்களையும் அந்த 2 வருட படிப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதானே ? இந்திய மாணவர்களுக்கு உதவேண்டும் என்று 1500 இடங்களை ஒதுக்கிய நீங்கள் அதைச் செயல் படுத்த உங்களிடம் வழி  (2 வருடம் படிப்பு) இருந்தும் ஏன் அப்படிச் செய்யவில்லை ?

சிறந்த மாணவர்கள் ஒரு வருட படிப்பிற்கும் , தகுதி குறைந்த மாணவர்கள் 2 வருட படிப்பிற்கும் தேர்வு செய்யப்பட்டு கோட்டாவை நிரப்பி இந்தியப் பெற்றோர்களின் மனதையும் குளிர வைத்திருக்கலாமே ? பிரச்சனைகள் இந்த அளவு  பூதகரமாக வெடித்து மக்கள் அரசாங்கத்தின் மேல் உள்ள நம்பிகை மேலும் குறையாமலாகிலும் இருந்திருக்குமே !

மலேசிய அரசாங்கம் இந்தியர்கள் மேல் உள்ள கரிசனம் இவ்வளவுதான் என்று  இவ்விடயத்தில் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது. நாடாளும் அரசியல் வாதிகள்,ம.இ.க, ஐ.பி.எப், கெராக்கான் உட்பட  இந்த அரசை பரிவுமிக்க அரசு , மக்களுக்கு முன்னுரிமைக் கொடுக்கும் அரசு என்றெல்லாம் புகழ்ந்து பேசுவார்கள். ஆனால் அடிமட்ட தமிழனின் உரிமைகள் பறிபோகும் போது இந்த அரசியல்வாதிகளின்  செயல் என்றுமே முழுமையாக இருந்ததில்லை.

இது வருடா வருடம் வானத்தில் எழும் புகை மூட்டம் போல வந்து போகின்ற ஒன்றுதான். பேற்றோர்களும் மாணவர்களும் ஆய் ஊய் என்று ஓரிரண்டு மாதம் கத்துவார்கள் , பின்பு எல்லாம் அடங்கி ஓய்ந்து , இடம் கிடைக்காத மாணவர்கள் நொந்து வெந்து அரசாங்கத்தை வைது, விதி வழி என்று கிடைத்த துறையை பெற்றுக்கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.

பெரும்பாலான இந்தியர்களை இது பாதிக்க வில்லை என்பதனால் அவர்களும் இதை வெகுவாக கண்டு கொள்வதில்லை.

இதைப்பற்றி அக்கறை எடுத்துக் கொள்வதெல்லாம் சில அரசுசாரா அமைப்புகளும் ஒரு சில எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமே ! அந்த வகையில் மலேசிய இந்தியக் கல்வி சமுக விழிப்புணர்வு கழகத்தின் தலைவர். ஆ.திருவெங்கேடம் அவர்களின் பங்கு அளப்பறியது .

அவருடன் சேர்ந்து எதிர்க்கட்சியில் உள்ள மாண்புமிகு குலசேகரனின் அரசுக்கு கொடுக்கும் குடைச்சலும் பாராட்டக் கூடிய ஒன்று. . இவர்கள் பத்திரிகைகளில்  மூலமும் , ஆர்ப்பாட்டங்கள் மூலமும் கொடுக்கின்ற அழுத்தங்களால் இந்த அரசு சிறிது அசையத் தொடங்கியுள்ளது.

அதன் விளைவே கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் கொடுத்த விளக்கம்.  அதன் பின்னரே  துணைக் கல்வி அமைச்சர் திரு கமலநாதன்  அவர்கள்  இந்திய மாணவர்கள் எத்னைப் பேருக்கு கிடைத்துள்ளது என்பதனை கேட்பவர்களுக்கு காண்பிபேன் ஆனால் பத்திரிகைகளில் வெளியிடமுடியாது என்று எதோ அவருடைய அப்பன் வீட்டுச் சொத்தை அள்ளிக்  கொடுப்பது போல்  அறிக்கை விட்டுள்ளார்.

மெர்ட்ரிகுலேசனில் மாணவர் சேர்ப்பு முடிந்து எறக்குறைய 6  வாரங்கள் மேல் ஆகியும் , நமது மாணவர்களின் என்ணிக்கை மட்டும் இன்னும் தெளிவாகத் தெரியாத பட்சத்தில் , இனிமேலும் இடம் கொடுத்து நம் மாணவர்கள் என்னதான் செய்யப் போகின்றார்களோ என்ற சலிப்பும் நம் மனதில் தோன்றாமல் இல்லை.

புதிதாக செய்தி ஒன்று விட்டிருக்கின்றார் துணக் கல்வி  அமைச்சர் மாண்புமிகு கமலநாதன் அவர்கள். 1142 மாணவர்கள் மெட்ரிகுலேசனில் பதிந்து கொண்டிருக்கின்றார்களாம் ,. மீதம்   358 இடங்களை இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கும்படி துணைப் பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாம் .

அப்படியென்றால் ,துணப்பிரதமர் நாடாளுமன்றத்தில் , 1500 இடங்கள் இந்தியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று சொன்னாரே . அது பொய்யா ? கல்வி சார்ந்த விவகாரத்தில் அரசாங்கம் இந்திய மாணவர்களை ஏமாற்றவில்லை என்று சொன்னதும் பொய்யா?

துணைப் பிரதமர் 1500 இடங்கள் என்று அறிவித்தப் பின்னர் அதை அமுல் படுத்துவதுதானே அரசாங்க அதிகாரிகளின் வேலை. அதற்குண்டான வழி முறைகள் ஏற்கனவே இருக்கின்றனவே ?

இப்பொழுது கமலநாதன் அவர்கள் 358 இடங்களுக்கான பட்டியலொன்றைச் சமர்ப்பித்திருகின்றேன் என்றால் , அமைச்சின் அதிகாரிகள் துணப்பிரதமர் உத்தரவை செயலாக்கம் காணத் தவறிவிட்டனர் , ஆகையால் நமது துணைக் கல்வி அமைச்சர் அதனை பூர்த்தி செய்ய கல்வி அமைச்சர் அலுவலகத்தை நாடி இருக்கின்றார்.

அப்படியென்றால் ,அரசு சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று தானே அர்த்தம். அரசு அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலைகளை கமலாநாதன் ஏன் செய்து கொண்டிருக்கிறார் ?

பத்திரிக்கை நிருபர்களிடம் எந்த பட்டியலைக் காண்பித்தார் ? அதில் என்ன இருந்தது ? யாராவது பார்த்து அதன் உள்ளடக்கத்தை உறுதி செய்யதார்களா?  பட்டியலை நிருபர்களிடம் காண்பித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா ?

அதை  பத்திரிகைகளில் அல்லது இணையத்தில் வெளியிட வேண்டியதுதானே ? மக்களே தீர்மானிக்கட்டும் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறதென்று. ஏன் இந்த கண்ணாம் பூச்சி விளையாட்டு ?

மெட்ரிகுலேசன் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு 6 வாரங்கள் ஆகிவிட்டன. நாட்கள் ஒவ்வொன்றாக நகர நகர இழப்பு நமது மாணவர்களுக்குத்தான் என்பதனை கமலாநாதன் உணருவாரா ? இந்த இழப்பிற்கு ஈடு செய்ய அவரால் என்ன செய்யமுடியும்?. இன்னும் எத்தனை காலம்தான் நாம் ஏமாந்து வாழவேண்டும் ?

அரசு எப்பொழுது  மக்கள் எல்லோரும் தனக்குரியர் என்று கருதுகின்றதோ அன்று தான் நமக்கு விடிவெள்ளி போலும் .

 கோவிந்தசாமி அண்ணாமலை

தஞ்சோங் மாலிம்

7-07-2013