‘மொழியும் மதமும் வேறுவேறு’  – ந காந்திபன்

தமிழ் பேசுபவர்கள் அனைவரும் இந்துக்கள் அல்ல. இந்துக்கள் அனைவரும் தமிழர்களும் அல்ல. இதுதான் அடிப்படை. ஒரு மொழி சார்ந்த பாடப் புத்தகம் ஒருமதத்தை மட்டும் தூக்கி பிடிக்க வேண்டும் எனக் கட்டாயம் இல்லை. அது எந்த மதம் சார்ந்த மற்றும் மதம் சாரா நபர்களைப் பற்றியும் பேசலாம். ஒரு மொழி ஒரு மதத்தின் சொந்தம் ஆகாது.

சமயம் மற்றும் கடவுள் நம்பிக்கை வளர்க்கும் பொறுப்பு பள்ளிகளுக்கும், பாடப் புத்தகத்திற்கும் இல்லை என்பதுதான் உண்மை. இந்தக் கருத்து எல்லா சமயத்தையும் சாரும். ஒரு மதத்தின் மீது இருக்கும் அணுகுமுறை கண்டிப்பாக இதை எழுதும் எனக்கும், இதைப் படிக்கும் உங்களுக்கும் வெவ்வேறாகத்தான் இருக்க முடியும். இந்த உறவு என்றும் ஒரே மாதிரி நிலைத்து நிற்காது; காலத்திற்கு ஏற்ப மற்றும் வளரும் சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மாறிக்கொண்டே இருக்கும்.

ஒரு மொழி சார்ந்த பாடப் புத்தகம் அந்தச் சமூகத்திற்குப் பங்காற்றியவர்கள் பற்றி பேசுவதில் எந்தத் தப்பும் இல்லை. மகாகவி பாரதியார் முதல் பெரியார் வரை, சமூக நீதி பற்றிப் பேசிய அனைவரையும் நாம் அறிமுகம் செய்ய வேண்டும். இது காலத்தின் கட்டாயம். சமூக நீதி பேசிய மற்றும் போராடியவர்களின் பேரும் புகழும் அரை பக்க எழுத்துக்கள் தாண்டி நிலைத்து நிற்கும். சமூக ஏற்ற தாழ்வு இருக்கும் வரை இவர்களின் கருத்துக்கள் என்றென்றும் ஒலிக்கும்.

திராவிடம் என்பது ஒரு சமூக நீதி சொல். அன்று, அது தமிழ் மற்றும் அதன் குடும்ப மொழியைக் குறிக்கும் சொல்லாக இருக்கலாம். ஆனால், இன்று திராவிடம் என்பது ஒரு சமூக நீதி கருத்தியல். சாதியக் கட்டமைப்புக்கு எதிராகப் பேசும் கருத்தியல். பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக பேசும் கருத்தியல். பெரியார் திராவிடத்தை உருவாக்கவில்லை. அதை அவருக்கு முன்னர் அயோத்திதாசரும் பேசினார். திராவிடம் என்பது கடவுள் எதிர்ப்பு கொள்கை எனக் குறுகிய சிந்தனையில் பொய் பரப்புவது என்பது கருத்தியல் சார்ந்த உரையாடலுக்கு நீங்கள் செய்யும் துரோகம்.

தமிழருக்குத் தை முதல் நாளே புத்தாண்டு என்று முடிவு எடுத்தது கட்சி சார்ந்த அரசியல் பேசுபவர்கள் அல்ல. 1921-ஆம் ஆண்டு, பச்சையப்பன் கல்லூரியில், தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடினர். தமிழ் ஆண்டு என்று ஓர் ஆண்டுமுறை வேண்டும், அதைத் திருவள்ளுவர் பெயரில் ஆரம்பிக்கலாம் எனக் கருத்து எடுத்து வைக்கப்படுகின்றது. இந்த மாநாட்டில் நாத்திகர்கள் மட்டும் கலந்துகொள்ளவில்லை. மறைமலை அடிகள் மற்றும் திரு.வி.க போன்ற சைவ சமயத்தைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர் என்பதை இன்றைய மதம் சார்ந்த அமைப்புகள் அறிவார்களா?

உலகில் இயங்கும் எல்லாக் கருத்துக்களும் தத்துவங்களும் விமர்சனங்களுக்கு உட்பட்டு ஆக வேண்டும். மதம் இதற்கு விதிவிலக்கு அல்ல. விமர்சனங்களுக்கு உட்படும் கருத்துக்கள் முற்போக்கான கருத்துக்களை முன்வைக்கும். புனிதம் என்ற பெயரில் விமர்சனங்கள் மற்றும் கேள்விகளைத் தவிர்த்து வரும் தத்துவங்கள் குறிப்பாக மதம்; மதம் சார்ந்த அமைப்புகள் பிற்போக்காகவே இருக்கும்.

கிறித்தவர்களுக்குக் கிடைத்த போப்பாண்டவர்,  காலங்காலமாக விமர்சனங்களுக்கு உட்பட்டுதான், வறுமையை எதிர்த்தும் முதலாளித்துவத்தை விமர்சனம் செய்தும் வருகிறார்.  வெற்றியா தோல்வியா என்றக் கேள்வியைத் தாண்டி, குறைந்த பட்சம் குரலாவது எழுந்தது.

வாசகர்கள் சார்ந்த மதங்களும் இதைப் பற்றி பேச வேண்டும். திடிரென எழுந்த சனாதன கும்பல் எத்தனைமுறை நாட்டின் குறைந்தப் பட்ச சம்பளத்தை எதிர்த்து பேசிருப்பார்கள்?

சமூகநீதி பேசுவதற்கு எந்த வேதத்தை மேற்கோள் காட்டுவீர்கள்? இராமாயணம் மகாபாரதம் இவற்றில் எதையாவது? அசுரர்களை மற்றும் கெட்ட சக்திகளை வீழ்த்திய வீரம் தொழிலாளி வர்க்கத்திலிருந்து சுரண்டும் முதலாளித்துவத்தை எதிர்ப்பதில் எங்கே?

இன்றும் மலேசியாவில் சாதியக் கட்டமைப்பு அதிகமாகவேக் காணப்படுகின்றது. சாதிய அமைப்புகள் பரவலாகக் காணப்படுகின்றன. இதனைத் தகர்க்கும் வழிமுறை ஏதேனும் இந்து மதம் சார்ந்த அமைப்புகளுக்கு உண்டா? குரல் எழுப்பி உள்ளனரா?

இன்றும் மலேசியாவில் சாதிய அடையாளங்களுடன் திருமணம் மற்றும் சடங்குகள் நடைபெற்றுதான் வருகின்றன. இந்த அடையாளங்களை விளக்கியும் எதிர்த்தும் இந்து மதம் சார்ந்த அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளனவா?

பெரியார் பள்ளி பாடப் புத்தகங்களில் இருக்கக் கூடாது எனத் தீவிரம் காட்டும் இத்தனை அமைப்புகளும் இந்தியாவில் உள்ள உங்கள் தோழமை அமைப்புகளுடன், நிலமற்ற ஏழை விவசாயிகள் எப்படி நலம் பெற முடியும் எனக் கருத்து பரிமாற்றம் நடத்தியதுண்டா? அதில் தீவிரம் எங்கே?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்  – சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்


காந்திபன் நந்தகோபாலன்

செயலாளர், மலேசிய சோசலிசக் கட்சி இளைஞர் அணி