மனித குலத்தை காப்பாற்றும் மர்மமான நுண்ணுயிர்கள் – கவிதா கருணாநிதி

நுண்ணுயிர்களை பெக்டிரியா, வைரஸ், புரொடொசொவ, அல்கெ என்று பலவகையாகப் பிரிக்கலாம்.  நம் கண்களுக்குத் தென்படாமல் காற்றிலும் நீரிலும் உடம்பிலும் நுண்ணுயிர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

டிசென்ட்ரி (Dysentery), கொலெரா(Cholera),  டைபோய்ட்(Typhoid) போன்ற நோயினால் பாதிப்படைவதால் நாம் நுண்ணுயிர்கள் ஆபத்தானவை என்று கருதுகிறோம். ஆனால், தீய நுண்ணுயிர்களைக் காட்டிலும் நன்மை அளிக்கக்கூடும் நுண்ணுயிர்கள்தான், இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கக் காரணமாக அமைகின்றது.

நம் உடம்பில் உணவு செரிமானம் ஆவதற்கும், மருந்துகளும் உணவுகளும் தயாரிப்பதற்கும், கழிவுகளை அகற்றுவதற்கும் நுண்ணுயிர்கள்தான் பெரும் பங்காற்றுகிறது.

நம்மை சுற்றி மட்டுமல்லாமல் ஆழ்கடலிலும் நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. ஆழ்கடலில் வாழும் மர்மமான நுண்ணுயிர்களின் தன்மைகளை ஆராய்வது மிகவும் கடினம் என்கிறார்கள்  ஆராய்ச்சியாளர்கள்.

பூமியின் நான்கில் மூன்று பங்கு நீர் என்பதால் பூமியின் அதிக பரப்பளவு பெருங்கடலாகும். சூரிய ஒளி, பிராணவாயு இல்லாத ஆழ்கடலில் பல ஆண்டுகள் உயிர்வாழும் பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் இருக்கின்றன.

ஆழ்கடலில் இருக்கும் எல்லா உயிரினங்களின் எடையை அளந்தால் அதில் 90 சதவீதம் நுண்ணுயிர்களின் எடையாகத்தான் இருக்கும். ஆழ்கடலில் இருக்கும் நுண்ணுயிர்களை நுண்ணோக்கியில் (Microscope) பார்த்ததில் வானத்தில் பச்சை நிறத்திலுள்ள நட்சத்திரங்களை பார்ப்பது போல் தோற்றமளிக்கும். இவை கடந்த 100 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் நுண்ணுயிர்களாகும்.

அனைத்து நுண்ணுயிர்களும் மௌனமாக தங்களது பங்களிப்பை ஆற்றி இவ்வுலகை இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. ஆழ்கடலில் உருவாகும் மிதேன் வாயு (Methane) கரியமிலவாயுவைவிட 24 மடங்கு வெப்பத்தை அளிக்கக்கூடும் சக்தி உள்ளது.

இவ்வாயு பூமிக்கு வந்தால் பருவநிலை மாற்றம் (Climate change) ஏற்படும். இந்நிலை ஏற்படாமல் ஆழ்கடலில் இருக்கும் நுண்ணுயிர்கள் பல ஆண்டு காலமாகச் செயலாற்றி வருகின்றது. இந்நுண்ணுயிர்கள் பூமியின் வெப்பத்தையும் குறைப்பது மட்டுமல்லாமல் பெருங்கடலில் இருக்கும் மற்ற உயிரினங்களையும் நோய்களிலிருந்து பாதுகாக்கின்றது.

மேலும், பிராணவாயு நுண்ணுயிர்களின் கழிவுப் பொருள் என்பதால் உலகில் 50 சதவிகித பிராணவாயுவை ஆழ்கடலில் இருக்கும் நுண்ணுயிர்கள்தான் தயாரிக்கின்றது.

பரிணாம வளர்ச்சியில் நுண்ணுயிர்களின் கண்டுபிடிப்புகளால் நுண்ணுயிர்கள் எப்படி இரகசியமாகச் செயலாற்றி பூமியை இயங்க வைத்து நம்மை வாழ வைக்கின்றது என்ற உண்மையை நாம் உணரலாம்.

(கட்டுரையாளரின் முணுமுணுப்பு – மைக்ரோபயலோஜி (நுண்ணுயரியல் படிக்கும் ஆர்வம் கூடியதால் இந்தக்கட்டுரை – அடேயப்பா இவ்வளவு உள்ளதா என்று வியந்த பொழுது, உங்களுக்காக இது .. )