வேள்பாரி: “நீங்களும் அரசாங்கம்தான், இல்லையா?”

-ஜீவி காத்தையா, ஜூன் 6, 2013.

MIC-Velpariபழமை வாய்ந்த மஇகாவில் ஒரு புதிய சலசலப்பு தென்படுகிறது. இத்தனை ஆண்டுகாலமாக “மனு கொடுப்போம்”, மகஜர் கொடுப்போம்”, வேண்டுகோள் விடுக்கப்படும்”, “கேட்கப்படும்”, போராட்டம் நடத்தப்படும்” என்றெல்லாம் படும், படும் பஜனை பாடி, எதுவும் கெஞ்சியபடி கிடைக்காததால் இனிமேல் எதுவும் கேட்க மாட்டோம், கடையை மூடுவோம் என்ற விரக்தியில் கூவிய ச.சாமிவேல் காலத்திற்குப் பின்னர், அரசாங்கத்தைத் தட்டிக் கேட்கும் மனப்பாங்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலரிடம் தோன்றியுள்ளதாகத் தெரிகிறது. தெருமுனைக்குச் செல்லவும் தயாராகியுள்ளனர். அங்குதானே நாய்களாகவும், பரதேசிகளாகவும் கருதப்படும் மக்களுக்கு விடிவு பிறக்கிறது!

இன்னும் முக்கியமானது, மஇகாவும் ஆளுங்கட்சி. அதுவும் அரசாங்கம்தான் என்று பகிரங்கமாக அமைச்சர்களாக இருக்கும் அக்கட்சியின் தலைவர்களுக்கு நினைவுறுத்தப்பட்டுள்ளதுதாகும்.  இந்நினைவுறுத்தல் காலங்கடந்து விடுக்கப்பட்டிருந்தாலும், இது அவசியமானது என்பதுடன் இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். தகுந்த இடத்தில், தக்க வசதிகளுடன் இருக்கும் மஇகாவின் வியூக பிரிவு தலைவர் எஸ். வேள்பாரி கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கு விடுத்திருக்கும் இந்நினைவூட்டல் வரவேற்கத்தக்கதாகும்.

அக்கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு மகிழ்ச்சி அளிக்கும் இந்நினைவுறுத்தல் கட்சியின் இன்னும் பலருக்கு அதிர்ச்சியையும் சினத்தையும் நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கும் என்று கூறலாம்.

இதில் உள்நோக்கம் இருக்கிறது என்று நிச்சயமாக பலர் கூறுவர். இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால், இது மஇகா தலைவர்களுக்கும், இதர பாரிசான் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஓர் அரசியல் அரிச்சுவடி ஆகும். இது பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநிலங்களை ஆட்சி செய்யும் பக்கத்தான் தலைவர்களுக்கும் பொருந்தும், ஏனென்றால் அவர்களும் “கவனிக்கப்படும்”, “மேலிடத்திற்கு கொண்டு செல்லப்படும்” “வாக்குறுதி காப்பாற்றப்படும்” என்றெல்லாம் பேசத் தொடங்கியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக எஸ். வேள்பாரி சில வேறுபட்ட கருத்துகளைக் கூறி வருகிறார். இதில் குறிப்பிடத்தக்கது போலீஸ் தடுப்புக்காவலில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்படும் இந்தியர்களின் இறப்பு. இது ஒரு நீண்டகால விவகாரமாக இருந்து வருகிறது. அரசாங்கம் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது ஊரும் உலகமும் அறிந்த ஒன்றாகும்.

MICஇதுவரையில், அமைச்சர்களாக இருக்கும் மஇகா தலைவர்களின் செயல்பாடுகள் போலீஸ் தடுப்புக்காவலில் கொல்லப்படும் இந்தியர்களுக்காக வருத்தம் தெரிவிப்பதும் அச்சம்பவங்களை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம் என்று கூறுவதோடு நின்றுவிடும்.

வேள்பாரியின் கூற்றுப்படி, மஇகா தலைவர்கள் அமைச்சர்கள் என்ற முறையில் வெறும் ஓடும்பிள்ளைகளோ, ஒப்பாரி வைப்பவர்களோ அல்லர். அவர்கள்தான் அரசாங்கம். அமைச்சரவையில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் அவரது கேள்வி. (Aren’t you also the government? Why make noise outside but fail to take up the issue in the cabinet?”).

இந்நாட்டில் இந்தியர்கள் என்றால் மஇகா, மஇகா என்றால் இந்தியர்கள். நாங்கள்தான் இந்தியர்களின் தாய்க்கட்சி என்று டமாரம் அடித்துக்கொள்ளும் மஇகா போலீஸ் லோக்கப்பில் இறக்கும் இந்திய இளைஞர்களைப் பற்றி அக்கறைகூட கொண்டதில்லை என்று வேள்பாரி மஇகா தலைவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார். (“You say MIC is the mother party for Indians but you don’t even take care of the Indian boys who are dying in police lock-ups.”)

மஇகா ஆளுங்கட்சி. அது எதிர்க்கட்சி அல்ல. மஇகாவின் தலைவர்கள் அமைச்சர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள், ஆள்பவர்கள். அரசாங்கத் துறைகளுக்கு உத்தரவு பிறப்பிப்பவர்கள். அரசாங்கத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் இதர அமைச்சர்களைப் போல் பொறுப்பேற்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள். அமைச்சரவை அரசாங்கம் (Cabinet government) என்ற கோட்பாட்டின்படி ஓர் அமைச்சர் அவரது  அமைச்சின் செயல்பாடுகளுக்கு தனிப்பட்ட பொறுப்பும், அமைச்சரவை உறுப்பினர் என்ற முறையில் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு கூட்டான பொறுப்பும் உடையவராவார். அமைச்சரவை எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ள விரும்பாத அமைச்சர் தாமாகவே பதவி துறக்க வேண்டும் அல்லது பிரதமர் அவரது பதவி துறப்பை கோரலாம் அல்லது அவரை பதவியிலிருந்து அகற்றலாம்.

இந்நாட்டில் போலீஸ் தடுப்புக்காவலில் இந்தியர்கள் கொல்லப்படுகின்றனர் என்பதற்கு நீண்ட வரலாறு உண்டு. போலீஸ் துறைக்கு பொறுப்பான உள்துறை  அமைச்சர் அக்கொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள தவறி விட்டார் என்பது நாடறிந்த உண்மை.

போலீஸ் தடுப்புக்காவலில் இந்தியர்கள் கொல்லப்படுவது பற்றிய செய்திகள் வெளியானதும் ஆளுங்கட்சியான மஇகாவின் தலைவர்கள் வருத்தம் தெரிவிப்பார்கள், பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்பார்கள். அத்துடன் அவர்களின் ஈடுபாடு முடிந்து விடுகிறது. ஆனால், போலீஸ் தடுப்புக்காவல் கொலைகள் தொடர்கின்றன.

போலீஸ் தடுப்புக்காவல் கொலைகளுக்கு எதிரான உள்துறை அமைச்சரின் நிலைப்பாடு என்ன? அமைச்சரவையின் நிலைப்பாடு என்ன? அமைச்சரவை உறுப்பினர்களான மஇகா அமைச்சர்களின் நிலைப்பாடு என்ன?

மஇகா அமைச்சர்கள் போலீஸ் தடுப்புக்காவல் கொலைகளுக்கு அமைச்சரவையில் எதிர்ப்பு தெரிவித்திருந்தால், அமைச்சரவையின் முடிவு என்ன? அப்படி ஒரு முடிவு இருக்கிறதா? இருந்தால், அந்த முடிவு மஇகா அமைச்சர்களுக்கு ஏற்புடையதா?

போலீஸ் தடுப்புக்காவலில் இந்தியர்கள் கொல்லப்பட்டது மஇகா அமைச்சர்களுக்கு ஏற்புடையதல்ல. அமைச்சரவைக்குத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து விட்டனர். ஆனால், அது குறித்து உள்துறை அமைச்சரும் அமைச்சரவையும் எந்த நடவடிக்கையோ, முடிவோ எடுக்கவில்லை, அல்லது அமைச்சரவை எடுத்த  முடிவு தங்களுக்கு ஏற்புடையதல்ல என்றால், அமைச்சரவையிலிருக்கும்  மஇகா அமைச்சர்கள் என்ன செய்ய வேண்டும்?

அமைச்சரவை அரசாங்க (Cabinet government) கோட்பாட்டிற்கு இணங்க அவ்விரு அமைச்சர்களும் பதவி துறக்க வேண்டும். ஏன் பேச்சும் மூச்சும் இல்லை? இதுதான் “Aren’t you also the government?” என்பதன் வழி வேள்பாரி கேட்காமல் கேட்கும் கேள்வி!

பதவி துறப்பதா?

நமது அமைச்சர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள் உலகத்திற்கே வழிகாட்டுகிறோம் என்ற மனப்போக்குடையவர்கள். இதர நாடுகளில் அமைச்சர்கள் பதவி துறப்பது அமைச்சரவை அரசாங்க கோட்பாட்டின் அச்சாணியாகக் கருதப்படுகிறது.

தமிழ் நாடு, அரியலூரில் ஓர் இரயில் விபத்து ஏற்பட்டது. தாமாக அதற்குப் பொறுப்பேற்று இந்திய அரசின் இரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்தி பதவி துறந்தார்.

மலேசியா, ஜொகூரில் நடந்த ஒரு விமான விபத்தில் பலர் மாண்டனர், விவசாய அமைச்சர் உட்பட. அதற்குப் பொறுப்பேற்று பதவி துறக்குமாறு அப்போதைய போக்குவரத்து அமைச்சர் வி. மாணிக்கவாசகம் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதற்கு அவர் தாம் அந்த விமானத்தை ஓட்டிய விமானி அல்ல என்று பதில் அளித்தார்.

கிறிஸ்டினா என்ற பெண்னுடனான தொடர்பு பற்றி பிரிட்டீஷ் காமன்ஸ் அவையில் பொய்யான தகவல் அளித்த அமைச்சர் புரபியூமோ பதவி துறந்தார்.

இந்நாட்டில், ஒரு வெளிநாட்டுப் பெண் வெடி குண்டு வைத்து உடல் சிதறடித்துக் கொல்லப்பட்டார். ஆனால், அப்படி ஒரு பெண் இந்நாட்டிற்குள் நுழைந்ததற்கான ஆவணம் எதுவும் குடிநுழைவுத்துறையிடம் இல்லை. இந்த இலாகவுக்கு பொறுப்பான உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் பதவி துறக்கவில்லை. ஓர் ஆவணத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கத் தவறிய ஹிசாமுடின் இன்று இந்நாட்டின் தற்காப்பு அமைச்சர்!

தவறுக்கு பதவி துறப்பு அல்ல பதவி உயர்வுதான் நமது அமைச்சரவையின் பாரம்பரியம். ஆகையால், போலீஸ் தடுப்புக்காவலில் கொல்லப்படும் இந்தியர்களுக்காக மஇகா அமைச்சர்கள் கோட்பாட்டின் அடிப்படையில் பதவி துறப்பது போன்ற கெட்ட காரியங்களை நிச்சயமாக செய்ய மாட்டார்கள்.

ஆனால், இப்படி அநியாயமாகக் கொல்லப்படும் பாதகச் செயல்களுக்கு முடிவு கட்ட தெருமுனைக்குப் போவோம் என்ற வேள்பாரியின் சிந்தனை வரவேற்கப்பட வேண்டியதாகும். பாதயாத்திரை நமது பாரம்பரியம். உயிர் காக்க தெருமுனை யாத்திரை மேற்கொள்வது மிக உயர்ந்த செயலாகும். வேள்பாரி அதனைச் செய்ய விரும்புகிறார். ஆனால், செய்வாரா?, செய்ய விடுவார்களா?

சனியிடம் ஆசிர்வாதமா?

தாம் எடுத்துள்ள தெருமுனைப் போராட்டத்திற்கு ஆசீர்வாதம் பெற அல்லது கருத்துப் பரிமாற்றம் செய்யும் அல்லது விளக்கம்Paul low keng Swan பெறும் நோக்கத்தோடு வேள்பாரி எடுத்த முதல் அடி அபசகுணமாகத் தெரிகிறது.

நல்ல காரியம் செய்ய முற்படும்போது சனியனைச் சந்திக்கக் கூடாது. தற்போது, நேர்மை மற்றும் நல்லாளுகை என்ற பெயரில்  இயங்குவதாகக் கூறப்படும் அமைச்சில் பால் லவ் என்ற பெயருடைய “அமைச்சர்” செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் நாளிதழ் செய்திகளில் காண்கின்றோம்.

பால் லவ் என்ற ஒருவர் இன்றுவரையில் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை. நாடாளுமன்ற உறுப்பினரல்லாத பால் லவ் எந்த அரசமைப்புச் சட்டத்தின் கீழ் “அமைச்சர்” ஆனார்? அதுவும் “நேர்மை மற்றும் நல்லாளுகை” என்ற அமைச்சுக்கு சட்டத்திற்குப் புறம்பாக அமைச்சராக இருக்கிறார்.

அவர் எந்தச் சட்டத்தின் கீழ் அமைச்சராக்கப்பட்டார் என்று அவரிடமே கேட்டதற்கு, புத்ராஜெயாவை கேளுங்கள் என்று பதில் கூறினார். அவர் செனட்டரா என்ற கேள்விக்கும் புத்ராஜெயாவை கேளுங்கள் என்றார். தாம் எப்படி, எந்தச் சட்டத்தின் கீழ் அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பதை அறிவிக்க இயலாதவரிடம் போலீஸ் தடுப்புக்காவலில் கொல்லப்படும் இந்தியர்களுக்கு நீதி கேட்கச் சென்றால், எந்த அளவிற்கு நேர்மையான பதில் கிடைக்கும்?

இருப்பினும், வேள்பாரியும் இதர ஆர்வலர்களும் இந்த நேர்மை மற்றும் நல்லாளுகை “அமைச்சரை” கண்டனர், கேட்டனர், நாளை மீண்டும் காணப் போகின்றனர்.

வேள்பாரி இவ்விவகாரத்தில் உண்மையிலேயே தீவிரமான நிலைப்பாட்டை கொண்டிருப்பாரானால், முதலில் அவர் சந்திக்க விருக்கும் பால் லவ்வின் தகுதி என்ன என்பதை அவரிடமே நேரடியாகக் கேட்டு பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

safwan1இன்னொரு முக்கியமான கேள்வியையும் இந்த “நேர்மை மற்றும் நல்லாளுகை அமைச்சரான” பால் லவ்விடம் வேள்பாரி கேட்க வேண்டும். தற்போதைய உள்துறை அமைச்சர் ஸாகிட் ஹமிட் 16.1. 2006 இல் காஜாங்கில் அமிர் பாஸில் அப்துல்லா என்பவரை அவரது முகத்தில் குத்தியுள்ளார். அக்கிரிமினல் தாக்குதல் குறித்து போலீசார் ஏன் ஹமிடியை இன்னும் விசாரிக்கவில்லை.

இன்னொன்று, கடந்த மே 16 இல் பேரரசர் முன்பு சத்தியப் பிரமாணமும் இரகசியக் காப்பு பிரமாணமும் எடுத்துக் பதவி நியமனக் கடிதமும் பெற்றுக் கொண்ட     அமைச்சர் வாஹிட் ஒமாரும் துணை அமைச்சர் பி. வேதமூர்த்தியும் ஏன் நேற்று மீண்டும் இஸ்தானா நெகாராவில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

மேற்கூறப்பட்டுள்ள கேள்விகளுக்கு வேள்பாரி பெறும் பதில் அவரின் போலீஸ் தடுப்புக்காவல் இறப்புக்கு எதிரானப் போராட்டத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் என்று கூறலாம்.

எந்த அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தாம் “அமைச்சராக” நியமனம் பெற்றிருப்பதைக் கூற மறுக்கும் பால் லவ் “நானும்தான் அரசாங்கம்” என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆகவே, வேள்பாரி கவனமுடன் செயல்பட வேண்டும்.