கை கட்டி-வாய் பொத்தி- தலையசைப்பதுதான் கூட்டுப்பொருப்பு

gagகி.சீலதாஸ், செம்பருத்தி.காம். உண்மையைச்  சொன்னால்  அல்லது   நல்லதை  எடுத்துரைத்தால்  சிலருக்கு   கோபம்  பொத்துக்  கொண்டுவரும்  என்பதற்கு  உதாரணமாகக்  காட்சி  தருபவர்  வேறு  யாருமல்ல, சாட்சாத்  உள்துறை  அமைச்சர் – டத்தோ ஸ்ரீ  டாக்டர்  ஜாஹீது  ஹமிடி. ஒரே  அரசியல்  கட்சியில்  இருந்தாலும்  சரி  அல்லது  பல  கட்சிகள்  ஒன்றுகூடி  ஒரே  குடையின்  கீழ்  ஒற்றுமையாகச்  செயல்படுவதாக  ஒப்புக்கொண்டலும்  சரி  கட்சி  காட்டும் வழியில்தான்  போக   வேண்டும்; அது   இடும்  கட்டளையைத் தலையில்  சுமந்து  நடப்பவர்களாக   இருக்க   வேண்டும்.  கட்சிக் கொள்கைக்கு  எதிராக,  அரசின்  நடவடிக்கைகளைக்  கேள்வி  கேட்கக்  கூடாது  என்பது  ஒரு  கோட்பாடாக  இந்த  நாட்டில்   பேசப்படுகிறது.  வலியுறுத்தப்படுகிறது.

இதற்கு  சப்பைக்  கொட்டும்  நிலைக்கு  வந்துவிட்டார்  முன்பு  உள்துறை  அமைச்சைத் தம்  வசம்   வைத்திருந்த,  இப்போது  தற்காப்புத்  துறையை  அமைச்சராகத்  தரிசனம்  தரும் டத்தோ ஸ்ரீ  ஹிஷாமுதின்  ஹூசேன்.  இப்படிப்பட்ட   மனோபாவம்  எதைக்  குறிக்கிறது?  கட்சிதான்   முக்கியம்.  கட்சியின்  தலைமைத்துவம்  எதைச்  சொல்கிறதோ  அதன்படி  நடந்தாக வேண்டும்.  மாற்று  கருத்துக்கு இடமில்லை.  இப்படி  எல்லாம்   சொல்வதற்கான  காரணம்  என்ன?  கூட்டுப்பொறுப்பு  என்ற   கருத்தைக்   காட்டி  அமைச்சரவையில்   பேசப்பட்டதை  வெளியே  விவாதிக்கக்கூடாது  என்பதாகும்.

இதில்   விசித்திரம்  என்னவெனில்,  அமைச்சரவையில்   உண்மையிலேயே  கருத்துப்  பறிமாற்றம்   இருந்ததா  என்பதே;  ஒருவேளை கருத்துப்  பரிமாற்றம்   இல்லாத   காரணத்தால்  அல்லது   பொறுப்பில்  இருப்பவர்கள்  சொல்வதை   நம்பியவர்கள்   எதிர்வாதத்தை   சமர்ப்பிப்பதைத்   தவிர்த்து  இருக்கலாம்.  ஆனால்   உண்மை  நிலவரம்   அமைச்சரவையில்  சொல்லப்பட்டதற்கு  மாறாக  இருப்பின்   கூட்டுப்  பொறுப்பு  என்ற   காரணத்தைக்   காட்டினால்  அது   சோடையானதாக  அல்லவா   கருதப்படும்.

அமைச்சரவையில்  என்ன பேசப்பட்டது  என்பதை  பொதுமக்கள் அறிந்துகொள்வது  முடியாத  காரியம்.  நாடாளுமன்றத்தில்  விவாதிக்கப்பட்டவை,  நடவடிக்கைகள்  பொதுமக்களுக்கு  நாளேடுகள்   மூலமாகவோ  அல்லது   நாடாளுமன்ற   அறிக்கைகளில்   இருந்து  தெரிந்து  கொள்ளலாம்:  ஆனால்  அமைச்சரவை  நடவடிக்கைகள் அப்படி  அல்லவே.  அது  பரம   இரகசியமாகப்   பாதுகாக்கப்படுகிறது.  அதை  பொதுமக்களின்   பார்வைக்கு   விடுவது அரசின்   விருப்பத்தைப்   பொருத்தது.

எனவே   அமைச்சரவையில்   என்ன  நடக்கிறது  என்பதை  தெரியாதபோது  அதன்  உறுப்பினர்கள்   கூட்டுப்பொறுப்பு  என்ற   சங்கிலியால்  பிணைக்கப்பட்ட   மனச்சான்றினைத்   துறந்து   செயல்பட   வேண்டும்  என்பதுதான்   இன்றைய  நாடாளுமன்ற   அரசியல்   தத்துவம்.

சில   ஆண்டுகளுக்கு   முன்பு  டத்தோ  சோதிநாதன்   நாடாளுமன்றத்தில்  தமது  கட்சியின் (தேசிய  முன்னணி)  கருத்துக்கு  எதிராகச்   செயல்பட்டார்  என்ற  காரணத்தைக்   காட்டி  ஆறுமாத   இடைக்கால  நீக்கம்   செய்யப்பட்டதை   என்னவென்பது ?  மனச்சாட்சிக்கும்   நவீன அரசியல்   கட்சிக்கும்   வெகுதூரம்.  என்றைக்கு   மனச்சாட்சிக்கு   மதிப்பளிக்கும்  தரமான   அரசியலை   நடத்த   அரசியல்வாதிகளும்  அரசும்  தயாராகிறதோ  அன்றுதான்   நாட்டுக்கும்  மக்களுக்கும்   விமோசனம்   ஏற்படும்.