சாலை நெரிசலும் மூளைக் குடைச்சலும்

-முனைவர் ஆறு. நாகப்பன், அக்டோபர் 10, 2013.

சிற்றூர்கள் உட்பட சிறிய, பெரிய எல்லா நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல் மலேசியாவின் முதல் நிலை பிரச்சனையாகியுள்ளது. சில நகரங்களில் காலை மணி ஆறு முதல் நள்ளிரவுக்குப் பின்னும் நெரிசல் நிரந்தரமாகிவிட்டது. சனி, ஞாயிறுகள், இதனை ஒட்டிக் கூடுதலாக வரும் விடுமுறை நாட்கள், விழாக் காலங்கள் இப்படி எல்லாக் காலங்களிலும் சாலை நெரிசலும் மலேசியப் பண்பாட்டில் ஒரு கூறு ஆகிவிட்டது.

சாலை நெரிசல் ஏற்படுத்தும் இழப்பு என்ன?

traffic jamநாடு முழுவதும் இலட்சக் கணக்கான வாகனங்கள் நகர முடியாமல் நெரிசலில் சிக்கிக் கொள்ளும்போது ஏராளமான எரிபொருள் வீணாகிறது. இருபது நிமிடப் பயணம் நெரிசலின்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாகுமானால் வாகனங்கள் நகராமலேயே வீணாகும் எரிபொருளின் அளவைக் கற்பனை செய்து பாருங்கள். இப்படி எரிந்து கரியாகும் எண்ணெயோடு மக்கள் வரிப் பணத்திலிருந்து வரும் அரசின் உதவிப் பணமும் எரிந்து போவதைக் மனக்கணக்குப் போட்டுப் பாருங்கள்.

சாலை நெரிசலால் எரிபொருள் மட்டும் வீணாகவில்லை. ஆயிரக்கணக்கான மணி நேரம் வீணாகிறது. ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தை சாலை நெரிசலில் வீணாக்குகின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவர்கள் சில இலட்சம் பேர் என்றால் அத்தனை இலட்சம் மணி நேரம் மக்கள் வாழ்க்கையில் வீணாகிறது. இந்த நேரம் மக்கள் வாழ்க்கையில் பயன் தரும் போக்கில் செலவானால் அது பொருளாதார மேம்பாடு, உடல், உள்ள நல மேம்பாட்டைக் கொண்டு வரும் என்று ஏன் நாம் சிந்திக்கவில்லை?

சாலை நெரிசல், குறிப்பாகக் காலையும் மாலையும் ஏற்படும் நெரிசலால் சாலை பயனீட்டாளர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகம் போய்ச் சேர வேண்டுமே என்ற கவலை. திரும்பும் போது வீடு சேர்வதற்குள் இருட்டிவிடுகிறது. இதனால் குழந்தைகளோடு வெளியில் செல்லவும் வேறு குடும்ப நலச் செயல்களில் ஈடுபடவும் முடியாத நிலை பெரும்பகுதி மலேசியருக்கு ஏற்படுகிறது. வெகு அருகில் இருக்கும் உறவினர் வீடுகளுக்குப் போய் வருவதற்குக் கூட விடுமுறை நாட்களை எதிர்பார்த்திருக்க வேண்டியுள்ளது.

அதிக கார்கள் சாலை நெரிசலை மட்டுமல்ல, விபத்துகளையும் காற்றுத் தூய்மைக் கேட்டையும் சுற்றுச் சூழலில் வெப்பத்தையும் கூட்டுகிறது.

சாலை நெரிசலுக்குக் காரணம் என்ன?

மோசமான பொதுப் போக்குவரத்து வசதிகள் முதன்மைக் காரணம் ஆகிறது. நமது பேருந்துகள், டாக்சிகள், இரயில்கள் போன்றவை தரத்தையும் முறையான பயணத்திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை.

ஒரு காலத்தில் சிறந்த போக்குவரத்துத் துணைவனாக இருந்த பேருந்துகள் இன்று சிறு நகர்களிலும் சிறு ஊர்களுக்கு இடையிலும் ஓடக் காணோம். ஓடுகின்றவை எப்போது வரும் போகும் என்று சொல்ல முடியாது.

இரயில் சேவையைச் சொன்னால் நாம் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னால் இருக்கிறோம் என்றே நான் நினைக்கிறேன். கோம்யுடர், நகருக்கு நகர் செல்லும் இரயில்கள் எதுவும் குறித்த நேரத்தில் போய்ச் சேராது. போகிற வேகமும் நம்ப முடியாத நத்தை வேகம். எ.டு: எக்ஸ்பிரஸ் ராக்யாட்டில் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் போய்ச் சேர ஏறத்தாழ 400 கி.மீ. தூரம். பயண நேரம் 7 மணி 30 நிமிடம். ஒரு மணி நேரத்தில் 360 கி.மீ. தூரம் போகும் மிகை வேக இரயில்கள் வந்து விட்ட காலத்தில் நமது இரயில்கள் ஒரு மணி நேரத்தில் 50 கி.மீ. போய்க் கொண்டிருக்கின்றன.

ஏன் இப்படி என்று ஓய்வு பெற்ற கே.டி.எம். அதிகாரி ஒருவரைக் கேட்டேன். அதிர்ச்சி தரும் தகவல்களை அதிராமல் தந்தார். ‘நமது என்ஜின்கள் எல்லம் மிகப் பழையவை. கொரியா, தைவான் போன்ற நாடுகளில் ஓடிக் களைத்தவற்றை வாங்கி வருகிறோம். பலவற்றுக்கு உபரிப் பாகங்கள் கிடைக்காது. சொந்தமாகச் செய்துதான் போடுவோம்’ என்றார்.

traffic-jamகிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வாரந்தோறும் சிங்கப்பூருக்கு இரயிலில் போய் வந்த நான் தாங்க முடியாத எரிச்சலோடு அதை விட்டுத் தொலைத்துப் பேருந்தில் போய்க் கொண்டிருக்கிறேன். அண்மையில் ஈ.டி.எஸ் பயணச்சீட்டு கிடைக்காமல் ஈப்போவுக்குப் போக எக்ஸ்பிரஸ் ராயாட்டில் ஏறினேன். அது அரதைப் பழைய கோச்சுகளைக் கொண்டிருந்தது. தானியங்கிக் கதவுகள் தானே இயங்கவில்லை. இருக்கைகள் அழுக்கேறி ஆடிப் போயிருந்தன. நல்ல பராமரிப்பைப் பார்த்தறியாத இந்த வண்டிகளில் பயணம் செய்வது எத்துணைக் கொடுமையானது என்று அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.

ஓராண்டுக்கு முன் வந்த கோலாலம்பூர் ஈப்போ ஈ.டி.எஸ் உச்சகட்ட வேகம் 140 கி.மீ.இல் 2 மணி நாற்பது நிமிடத்தில் ஈப்போ சென்றடைவது கொஞ்சம் ஆறுதல்.

டாக்சிகள் ஏராளமாக இருந்தாலும் அவை போகிற திசையில் நாம் போனால்தான் அவர்கள் சேவையைப் பயன்படுத்த முடியும். ‘அந்தப் பக்கம் நான் போகவில்லை, அங்கே சாலை நெரிசல், திரும்பி வரும்போது ஆள் கிடைக்காது’ இப்படிப் பல காரணங்களைக் காட்டி நகர்ந்து போகும் டாக்சிகள் அதிகம்.

நல்ல எடுத்துக்காட்டாகச் சிங்கப்பூரைப் பார்ப்போம். பேருந்து சேவை தரமானதாகவும் கட்டுப்பாடான திட்டப்படியும் மக்கள் வாழுகின்ற எல்லப் பகுதிகளையும் அலுவலகங்களையும் இணைக்கும் வண்ணம் அமைந்துள்ளன. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் அந்த இடத்திற்கு வரும் பேருந்துகளின் எண்கள் கொண்ட அறிவிப்புப் பலகை உள்ளது. இதைவிட முக்கியமானது ஒன்று உண்டு. நாம் ஏறவிருக்கும் எண் கொண்ட பேருந்து இன்னும் எத்தனை நிமிடங்களில் அந்த இடத்தை வந்து அடையும் என்பதை உங்கள் கைத் தொலைபேசியின் இணைய தளத்தில் பார்த்துக் கொண்டு நம் பயணத்தை வினாடி வீணாகாமல் திட்டமிட முடியும். இதைப் போலவே எம்.ஆர்.டி சேவைகளையும் அறிந்து கொள்ளலாம்.

நம் நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவைகள் திருத்தப்படாமல் இருப்பது திட்டமிட்டே செய்யப்படுவதாக இருக்கலாம். புரோட்டோன் தொடங்கி ப்ரொடுவ, வாஜா என்று கிட்டத்தட்ட 14 வகையான கார்கள் பல நிறுவனங்கள் வழி இலட்சக்கணக்கில் சாலைகளில் இறங்குகின்றன. ‘ஏழைகளும் கார் வாங்கலாம்’ என்ற தந்திரத்தின் அடிப்படையில் முன்பணம் இல்லாமல் முழுக்கடன் பெற்றுக் கார் வாங்கும் வசதிகளை வங்கிகள் வழங்குவதால் நமது சாலைகளில் எந்த நேரமும் கார்கள் நிரம்பி வழிகின்றன. இந்தக் கார் நிறுவனங்களுக்கும் கடன் கொடுக்கும் வங்கிகளுக்கும் பின்னணியில் இருக்கும் டத்தோ, டான்ஸ்ரீகள் சாலை நெரிசல் பற்றிக் கவலைப்படுவதில்லை.

மீண்டும் சிங்கப்பூரைப் பார்ப்போம். அங்கே சாலைக்கு வரும் கார்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றனர். கார் வாங்குவதற்கு முன் வாங்கும் அனுமதியை ஏலத்தில் எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் ஏலத்தில் இருபதாயிரம் சிங்கப்பூர் வெள்ளிக்குச் சற்றுக் கீழும் மேலுமாக நிர்ணயிக்கப்படும் தொகையைச் செலுத்திக் கார் வாங்கும் அனுமதியைப் பெற வேண்டும். இது காரின் விலையோடு சேர்க்கப்பட்டுக் கடன் வழங்கப்படும். முக்கிய சாலைகளில் செல்லும் கார்களுக்குக் கூடுதல் சாலைக் கட்டணம் அவரவர் கார்களில் உள்ள தானியங்கிக் கருவிகள் வழி செலுத்த வேண்டும். சில சாலைகளில் ஒருவர் மட்டும் செல்லும் கார்கள் செல்ல முடியாது. சனி, ஞாயிறு மட்டும் சாலைக்கு வரும் கார்களும் உண்டு. இக்காரணங்களால் சாலை நெரிசல் வெகு அரிது.

நம் நாட்டுச் சாலைகளில் கார்களின் எண்ணிக்கை வீங்கி வெடிக்கும் நிலை அடைந்தபோதும் போக்குவரத்தை முறையாக நிர்வகிக்கும் நடவடிக்கைளைப் பார்க்க முடியவில்லை. சாலை நெரிசலுக்கான நிர்வாகக் கொள்கைகள், தொடர் செயல்பாடுகள் என்று எதுவும் காணோம். நகரங்களில் சில இடங்களில் அரை மணி, முக்கால் மணி நேரத்திற்குப் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் காவலரைக் காண முடிகிறது. இதுவும் எல்லா இடங்களிலும் எப்போதும் இல்லை.

கொடுமையாக இருந்தாலும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த மலேசியர் முன் வராததும் சாலை நெரிசலுக்கு ஒரு காரணம்தான். பல வண்டிகளில் ஒருவர் மட்டுமே பயணம் செய்வதை எப்போதும் பார்க்க முடிகிறது.

சாலை நெரிசலுக்குக் காரணமாக இன்னொன்றையும் சொல்லலாம். நெரிசல் மிக்க பகுதிகளில் மாற்றுச் சாலைகள் இல்லை. நகர் சார்ந்த சாலைகளில் கூட டோல்கள் அமைத்து எல்லாரும் அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும் என்று வலை விரிக்கப்படுவதாலும் நெரிசல் மிகுதியாகிறது.

சாலை நெரிசலில் இத்தனை துயரங்களை அனுபவித்தாலும் சொந்தக் காரில் போவதுதான் கவுரவம் என்று நினைக்கும் மலேசியர்களின் மான உணர்வும் சாலை நெரிசலுக்கு இன்னொரு காரணமாகிறது.

எரிபொருள் வீணடிப்பு, பயனீட்டாளர்களின் மன அழுத்தம், குடும்ப அமைதி கெடுதல், நேர விரயம், சுற்றுச்சூழல் தூய்மைக்கேடு, விபத்துகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு சாலை நெரிசலை முறையாக நிர்வகிக்கும் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும். பொருத்தமான  நடவடிக்கைகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.