எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன்: நடிகை அனுஷ்கா

anushkaமேஜிக் நிபுணர் பி.சி.சர்க்காரின் பேத்தி டாக்டர் பியா சர்க்காரின் ‘டீச் எய்ட்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும், அமெரிக்காவில் உள்ள ஸ்டாண்ட் போர்டு பல்கலைக்கழகமும்’ சேர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அந்தந்த நாட்டின் பிரபலங்களின் அனிமேசன் உருவங்களை பயன்படுத்தி எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசார படங்களை தயாரித்து வருகின்றன. தமிழ்நாட்டில் நடிகர்கள் சூர்யா, சித்தார்த், நடிகைகள் அனுஷ்கா, சுருதிஹாசன் ஆகியோரின் அனிமேசன் உருவங்களை பயன்படுத்தி விழிப்புணர்வு சி.டி. தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது.

இதில், நடிகை அனுஷ்கா கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

‘‘நான் பெங்களூரில் படிக்கும்போதே அந்த கல்லூரியில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் நடக்கும். அதை நான் கண்டுகொள்வதில்லை. எய்ட்ஸ் நோயாளிகளை தொட்டாலோ, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டாலோ, அந்த நோய் வந்துவிடும் என்று பயந்தேன்.

டாக்டர் பியா சர்க்காரின் அறிமுகம் கிடைத்த பிறகு, எய்ட்ஸ் நோய் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டேன். அதனால்தான் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்கிறேன். சினிமாவில் நடித்துக்கொண்டே இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கும் நேரம் ஒதுக்குகிறேன்.

பள்ளி பருவத்தில் இருந்தே பாலியல் கல்வியை மாணவர்களுக்கு சொல்லித்தரவேண்டும். பெற்றோர்களும் இதுபற்றி குழந்தைகளிடம் போதிக்கவேண்டும்.

சினிமா காட்சிகளால்தான் பாலியல் குற்றங்கள் அதிகமாகி, எய்ட்ஸ் நோயாளிகள் பெருகுகிறார்கள் என்ற கருத்தை நான் ஏற்கமாட்டேன். எச்.ஐ.வி. பாதிப்பு என்பது அவரவர் நடத்தையை பொறுத்தது. சினிமாவில் எய்ட்ஸ் நோயாளிகள் தொடர்பான கதைகள் வராததற்கு எனக்கு காரணம் தெரியாது. அதை டைரக்டர்களிடம்தான் கேட்கவேண்டும். நான் வெறும் நடிகை மட்டும்தான். எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான படங்களில் நான் நடிக்க தயாராக இருக்கிறேன்.

திருமணத்துக்கு முன்பு ரத்த பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்ற கருத்து சமீபகாலமாக எழுந்துள்ளது. அந்தளவுக்கு நம் நாட்டில் நிலைமை மோசமாகவில்லை. அந்த சூழ்நிலை வருவதற்கு முன்பு எய்ட்ஸ் நோயை ஒழித்துவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அனுஷ்கா கூறினார்.