திருச்சிற்றம்பலம்

இந்தப் படத்தில் தனுஷ், இயக்குநர் இமயம் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், ரஞ்சனி, மு.ராமசாமி, முனீஸ்காந்த், அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – மித்ரன் ஆர்.ஜவஹர், தயாரிப்பு சன் பிக்சர்ஸ், இசை – அனிருத், ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ், படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, கலை இயக்கம் – ஜாக்கி

தனது தாத்தாவான ‘திருச்சிற்றம்பலம்’ என்ற பாரதிராஜாவுடனும், போலீஸ் இன்ஸ்பெக்டரான நீலகண்டன் என்ற பிரகாஷ்ராஜூடனும் சென்னையில் வசித்து வருகிறார் நாயகனான ‘திருச்சிற்றம்பலம்’ என்ற ‘பழம்’ என்ற தனுஷ்.

இவருக்கும், தந்தை பிரகாஷ்ராஜூக்கும் இடையில் கடந்த பத்தாண்டுகளாக பேச்சுவார்த்தையில்லை. இவருடைய அம்மாவும், தங்கையும் ஒரு கார் விபத்தில் மரணமடைந்ததில் இருந்து அந்த விபத்துக்கு பிரகாஷ்ராஜூவும் ஒரு காரணமாக இருந்ததால் அப்பா மீது கோபம் கொண்ட தனுஷ் அவருடன் பேசாமலேயே ஒரே வீட்டில் இருக்கிறார்.

அதோடு கல்லூரியில் தான் படித்துக் கொண்டிருந்த படிப்பைக்கூட விட்டுவிட்டார். தற்போது ஸ்விக்கி போன்ற ஒரு நிறுவனத்தில் உணவு சப்ளை செய்யும் வேலையைச் செய்து வருகிறார். தனுஷூம் அவரது தாத்தாவும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் அளவுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள்.

இவருடைய வீட்டுக்குக் கீழ் வீட்டில் வசித்து வருகிறார் நித்யா மேனன். ஐடி நிறுவனத்தின் வேலை செய்து வருகிறார். இந்த இரண்டு குடும்பங்களும் பல வருடங்களாக நெருங்கிப் பழகி வருகிறார்கள். இதனால் நித்யா தனுஷை ‘வாடா, போடா’ என்றும், தனுஷ் நித்யாவை ‘வாடி, போடி’ என்றும் உரிமையோடு அழைத்து வருகிறார்கள்.

இந்த நேரத்தில் கல்லூரியில் தனுஷூடன் படித்த ராஷி கண்ணா திடீரென்று தனுஷை சந்திக்கிறார். இருவரும் பழகுகிறார்கள். இதைக் கேள்விப்படும் நித்யா மேனன் ராஷியிடம் தனுஷை காதலிப்பதாகச் சொல்லச் சொல்கிறார். ஆனால் ராஷி, தனுஷின் காதலை மறுத்துவிட்டுப் போகிறார்.

இந்த நேரத்தில் திடீரென்று பிரகாஷ்ராஜுக்கு பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகிறார். இவர்களது வீட்டுக்கு ஒரு பெண் வந்தால்தான் இவர்களையெல்லாம் கவனித்துக் கொள்ள முடியும் என்ற நிலைமை ஏற்படுகிறது. தாத்தா பாரதிராஜா, பேரன் தனுஷை கல்யாணம் செய்து கொள்ளச் சொல்கிறார்.

கிராமத்தில் ஒரு திருமணத்திற்காக வந்த இடத்தில் பிரியா பவானி ஷங்கரை பார்க்கும் தனுஷ் உடனேயே அவருடன் மையல் கொள்கிறார். “இவர் எனக்குப் பொருத்தமாக இருப்பார்” என்று நித்யாவிடம் தனுஷ் சொல்ல, நித்யாவே பிரியாவை தனுஷிடம் அழைத்து வந்து பேச வைக்கிறார். ஆனால் பிரியாவுக்கு தனுஷ் மீது பிரியம் இல்லை என்பது தெரிய வர ஏமாற்றமாகிறார் தனுஷ்.

இந்த நேரத்தில்தான் “நித்யாவை ஏன் நீ கல்யாணம் செய்யக் கூடாது” என்று தாத்தா அட்வைஸ் கொடுக்க.. தனுஷ் குழப்பமாகிறார். இந்த நேரத்தில் நித்யாவும் வேலைக்காக வெளிநாடு கிளம்ப இருவரின் நிலைமையும் என்னவாகிறது என்பதுதான் கிளைமாக்ஸ் கதை..!

தனுஷ் இது மாதிரியான கதாபாத்திரங்களை அசால்ட்டாக செய்வார் என்பதால் இதையும் அப்படியேதான் செய்திருக்கிறார்.

மனம் கஷ்டப்படும்போதெல்லாம் தனது அறையில் இசைஞானியின் புகைப்படத்தின் முன்பாக அமர்ந்து சோக கீதங்களை கேட்டு கண்ணீர் விடும் தவிப்பாளராய் தனுஷ் நம்மை மிகவும் கவர்கிறார்.

தனது அப்பாவிடம் சரிக்கு சரி மல்லுக்கட்டி பேசும் காட்சியிலும், அவரைத் தூக்குவதற்கு முன்பு அவர் படும் தவிப்பை காட்டியவிதத்திலும் தனுஷின் நடிப்பு ஒரு ஸ்பெஷல்தான்.

தான் ஒரு இன்னசென்ட் என்பதை பல காட்சிகளிலும் நிரூபித்துவிட்டு கடைசியில் பக்கத்திலேயே இருக்கும் நித்யாவின் காதலை தான் இன்னமும் புரிந்து கொள்ளாமலேயே இருப்பதை உணரும் காட்சியில் நம்முடைய ஹார்மோன்ஸையும் தூண்டிவிட்டிருக்கிறார் தனுஷ். ‘தாய்க் கிழவி’ பாடல் காட்சியில் அவர் ஆடும் நடனமும் இன்னமும் தான் ஒரு ‘மன்மத ராசா’ என்பதை நிரூபிப்பதுபோல இருக்கிறது.

பிரகாஷ்ராஜ் எப்போதும்போல இந்தக் கதாபாத்திரத்தை தன்னைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். மகன் மீதான கோபம்.. அப்பா மீதான பரிதாபம்.. தன்னைத்தானே கழிவிரக்கத்தில் தள்ளிக் கொண்டு அவர் இருப்பதும், மகனின் புரிந்து கொள்ளாமையை நினைத்து அவர் புலம்புவதும், நோய்வாய்ப்பட்ட பின்பு தனது நிலைமையை மகனுக்கு எடுத்துச் சொல்லும் காட்சியிலும் ஐயோ பாவம்.. “பேசித்தான் தொலையேண்டா” என்று நம்மையே கத்த வைத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

படத்தின் ஆணி வேர் நித்யா மேனன்தான். அட்டகாசம் செய்திருக்கிறார். அவருடைய உடல் வாகுக்கும், முகத்திற்கும் பொருத்தமான உடைகளை அணிந்து அதில் ஒரு துளிகூட கிளாமர் வராமல் பார்த்துக் கொண்டு தனது நடிப்புத் திறனை மட்டுமே காட்டியிருக்கிறார் நித்யா.

இவருக்கும் தனுஷூக்கும் இடையில் நடக்கும் வாய்ச் சண்டைதான் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள். போதாக்குறைக்கு பாரதிராஜாவும் சேர்ந்து கொண்டு அவ்வப்போது அடிக்கும் ஒன் லைன் துணுக்குகள் படத்தில் ஆங்காங்கே சிரிப்பலையை எழுப்புகிறது.

பாரதிராஜா தனது பண்பட்ட நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மகனையும் விட்டுக் கொடுக்காமல், பேரனையும் புறந்தள்ளாமல் இருவரையும் சமாளித்துக் கொண்டு தானும் வாழ்ந்து காட்டும் இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் சிம்ப்ளி சூப்பர்.

“உனக்கு அப்பா.. எனக்கு மகன்டா” என்று வேதனையுடன் சொல்லும் அந்த ஒரு காட்சியிலேயே ஒட்டு மொத்த ஆடியன்ஸைும் உச்சுக் கொட்ட வைக்கிறார் பாரதிராஜா. தனது பழைய காதல் கதைகளை பேரனிடம் சொல்லும்போது அதற்கு தனுஷ் அளிக்கும் பன்ச்சில் தியேட்டரே அதிர்கிறது.

ஆனாலும், இவரும், தனுஷூம் சேர்ந்து மது அருந்தும் காட்சிகள் மட்டுமே படத்தில் இயல்பு தன்மை மீறிய காட்சிகளாக இருக்கின்றன. இந்தக் கால இளைஞர்கள் வயது, வித்தியாசம் பாராமல் பழகுகிறார்கள் என்றாலும் அதற்கு ஒரு லிமிட்டேஷன் வேண்டாமா இயக்குநரே..?!

நட்புக்கும், காதலுக்குமான எல்லைக் கோடுகளைப் பற்றி இதுவரையிலும் எத்தனையோ படங்கள் இதற்கு முன்பாக வந்திருந்தாலும் இந்தப் படம் அதே கதையில் போரடிக்காமல், கடைசிவரையிலும் ஒரு பரபரப்பாகவே சென்றிருக்கிறது. அந்த அளவுக்கு விறுவிறுப்பான திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர்.

ஒரு சின்ன காதல் கதையை சுவாரசியமான திரைக்கதையிலும், பொருத்தமான நடிகர்களின் நடிப்புத் திறனிலும், தனது சிறப்பான இயக்கத்திலும் செய்து காட்டி தனுஷூக்கும் ஒரு வெற்றிப் படத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர்.

இயக்குநருக்கும், படக் குழுவினருக்கு நமது வாழ்த்துகள்.