படங்கள் சரிவர ஓடாததால் தமிழ் பட உலகுக்கு ரூ.200 கோடி இழப்பு: கேயார்

krகடந்த 5 மாதங்களில் தமிழ் சினிமாவில் தோல்வி படங்களால் ரூ.200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் தெரிவித்தார்.

வேதநாயகி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘அலையே அலையே’. இந்தப் படத்தை தயாரிப்பாளர் குமாரின் பள்ளித்தோழரான மணிகண்ட குமார்தான் இயக்கியுள்ளார். டி.இமானிடம் கீபோர்டு பிளேயராக பல வருடம் பணியாற்றிய தன்வி என்பவர்தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நாயகனாக ‘மானாட மயிலாட’ புகழ் ரஞ்சித்தும் நாயகியாக நயனாவும் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் கேயார் பாடல்களை வெளியிட, நடிகர் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் டி.இமான் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டார்கள்.

விழாவில் கேயார் பேசியதாவது:- இன்று நிறைய தொழில் அதிபர்கள் சினிமாவுக்கு வருவது வரவேற்கத்தக்கது. பைலட்டுகள், டாக்டர்கள், சாப்ட்வேர் என்ஜினீயர்கள் எல்லாம் சினிமாவுக்கு வருகிறார்கள். ஒரு காலத்தில் சினிமா என்றால் கேவலமாக நினைத்த நிலைமை இப்போது மாறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம் படங்கள் சரிவர ஓடாததால், கடந்த ஐந்து மாதங்களில் தமிழ் பட உலகுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த நாலைந்து மாதங்களில் தியேட்டர் வசூல் மிக மோசமாக இருக்கிறது. சென்ற ஆண்டு 164 படங்கள் வெளிவந்தன. 200 படங்கள் வெளிவர முடியாமல் முடங்கிக்கிடக்கின்றன.

கடந்த ஆண்டு மட்டும் 180 புதுமுகங்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேர் மேலே வந்திருக்கிறார்கள்? இந்த எண்ணிக்கையை நினைத்து பாராட்டுவதா, பயப்படுவதா? என்று தெரியவில்லை.” இவ்வாறு கேயார் பேசினார்.