என்ன ஆனார் கலை இயக்குநர் வினோ மிர்தாத்?

vinoமலேசியா விமானம் மாயமானதைப் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், இன்னொரு ’மாயமான’ செய்தி. பிப்ரவரி 27-ல், கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோயிலுக்குச் சென்ற ‘மதுபானக்கடை’ படத்தின் கலை இயக்குநர் வினோ மிர்தாத், வழிதவறிக் காணாமல் போனார். இன்றுவரை வனத் துறை, காவல் துறை, நண்பர்கள்… என வினோ மிர்தாத்தைப் பல குழுக்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

”வினோத்தோட சொந்த ஊர் திண்டுக்கல். ‘மதுபானக்கடை’தான் அவருடைய முதல் படம். இப்போது ‘ஒன்பது குழி சம்பத்’, ‘நீர் நிலம் காற்று’ போன்ற படங்களில் நடித்து வருகிறார. பிப்ரவரி 27 அன்னைக்கு வெள்ளியங்கிரிக்கு போறேன்னு சொல்லிட்டுப் போனவர்தான். அடுத்த நாள் காலை 5 மணிக்கு ‘மதுபானக்கடை’ டைரக்டர் கமலக்கண்ணன் சாருக்கு ‘நான் வழிதவறி வந்துட்டேன்’னு மெசேஜ் அனுப்பியிருக்கார். பதறிப்போன அவரும் உடனே போன் பண்ணிப் பேச, ‘எங்கே இருக்கேன்னு கரெக்டா சொல்லத் தெரியலை… ஒரு குறிப்பிட்ட லேண்ட் மார்க்ல வந்ததும் சொல்றேன்’னு சொல்லியிருக்கார். ஆனா அதுக்குப் பிறகு வினோத்தின் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு. வினோத் வீட்டில் சொல்லி, போலீஸிடம் கம்ப்ளெய்ன்ட் கொடுத்துட்டு, எல்லா நண்பர்களும் சேர்ந்து தேடலாம்னு முடிவு செய்தனர். ஒருபக்கம் கமலக்கண்ணன், வினோத்தின் மத்த நண்பர்கள்னு பல குழுக்களாகப் பிரிஞ்சு காட்டில் தேடினர். இன்னொரு பக்கம் போலீஸ்காரர்களும் ஃபாரஸ்ட் ஆபீஸர்ஸும் தேடினர். நாலைஞ்சு நாள் காட்டையே அலசிப் பார்த்தார்கள். அவர் இருக்கிற இடமே தெரியவில்லை. போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டதால், ஐ.எம்.ஈ.ஐ நம்பரை வைத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவர் ரொம்ப தைரியமான ஆள். ஒரே ஒரு வேட்டியை மட்டும் எடுத்துக்கிட்டு மலையேறிடுவார். இதே மலைக்கு இதுக்கு முன்னாடி நிறையத் தடவை போயிருக்கார். அவருக்கு அம்மா கிடையாது, அப்பா மட்டும்தான். வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் முரட்டுத்தனமான மிருகங்கள் எதுவும் கிடையாது. அதனால் வினோ இறந்திருக்க வாய்ப்பு இல்லை என்று போலீஸ்காரர்கள் தெரிவித்தனர்.

‘மதுபானக்கடை’ படத்துல தன்னோட விவசாய நிலத்தை டாஸ்மாக் கடைக்குக் கொடுத்துவிட்டு, மனநோயாளியாத் திரியும் கேரக்டரில் நடித்தவர்.