என் சினிமாவை வைத்து மொழிச் சண்டையை உருவாக்காதீர்கள்: வடிவேலு வேண்டுகோள்

Vadivelu tenaliவடிவேலு நடித்துள்ள தெனாலிராமன் படம் வருகிற 18ந் தேதி வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தில் மன்னர் கிருஷ்ணதேவராயரை தவாறக சித்திரிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறி அதற்கு தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஒரு அமைப்பு, வழக்கும் போட்டிருக்கிறது. வடிவேலுவுக்கு ஆதரவாக சில தமிழ் அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் என் சினிமாவை வைத்து மொழிச் சண்டையை உருவாக்காதீர்கள் என்று வடிவேலு கூறியிருக்கிறார்

அவர் மேலும் கூறியிருப்பதாவது: தெனாலிராமன் அற்புதமான படம். ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்திருக்கோம். குழந்தைங்க முதல் பெரியவங்க வரைக்கும் இந்தப் படம் எப்போ வருமுன்னு காத்திக்கிட்டிருக்காங்க. யாரோ சிலர் பிரச்னைகளை தூண்டி விட்டுக்கிட்டிருக்காங்க. படத்தை பார்க்காமலேயே கருத்து தெரிவிப்பது நியாமாண்ணே.

தெனாலிராமன் படத்தில் கிருஷ்ணதேவராயர் என்ற ஒரு வார்த்தைகூட வராது. அரசனுக்கும், தெனாலிராமனுக்கும் உள்ள நட்பை சொல்லியிருக்கிறோம். சுந்தர தெலுங்கு மொழியை உயர்த்தி பேசி நடிச்சிருக்கேன்.

எனக்குமொழி வேற்றுமை கிடையாது. எல்லா மொழிபேசுகிறவர்களும் என் காமெடியை ரசிப்பார்கள். தமிழ்நாட்டில் எல்லாமொழி மக்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.

அவர்களுக்குள் மொழிச்சண்டையை இழுத்துவிட்டு சட்டம் ஒழுங்கை சீர் குலைக்காதீர்கள். யாரா சிலர் தூண்டுகிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களை புண்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு வடிவேலு கூறியுள்ளார்.