கவிஞர் வைரமுத்து எழுதிய நாவலுக்கு சர்வதேச விருது

கவிஞர் வைரமுத்து எழுதி 2012-ஆம் ஆண்டு வெளிவந்த “மூன்றாம் உலகப்போர்’ நாவல் அண்மையில் வெளிவந்த உலகத் தமிழ்ப் படைப்புகளில் சிறந்ததாக மலேசியாவின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதல், உலகமயமாதல் குறித்துத் தமிழில் பேசப்பட்ட உலகக் குரல் என்பதாலும், முன்மாதிரி இல்லாத முதற்படைப்பு என்பதனாலும், மொழிவளம் -வெளிப்பாட்டு உத்தி – உழவியல் வாழ்வை ஊடறுத்துச் சொல்லும் உளவியல் – இனிவரும் நூற்றாண்டு எதிர்கொள்ளவேண்டிய கருதுகோள் என்ற சிறப்புகளாலும் “மூன்றாம் உலகப்போர்’ சிறந்த படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்று நடுவர் குழுவர் குழு அறிவித்திருக்கிறது.

செப்டம்பர் 5-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறும் பிரம்மாண்டமான விழாவில் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. கவிஞர் வைரமுத்து நேரில் சென்று பரிசினைப் பெற்றுக் கொள்கிறார்.