இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார் எஸ்.ஏ.சி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி, தயாரித்து நடித்த படம் டூரிங் டாக்கீஸ்.

இரண்டு கதைகள் கொண்ட இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்றது. இதில் ஒரு கதையின் நாயகனாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்திருந்தார். இந்தப் படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரனின் நடிப்பிற்கு கிடைத்த வரவேற்பையடுத்து அவர் முழுநேர நாயகனாக மாற உள்ளார். அவருக்கு மேலும் இரண்டு படங்களில் நாயகனாக நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளது.

ஏ.வெங்கடேஷ் சொன்ன ஒரு கதை எஸ்.ஏ.சி.க்கு மிகவும் பிடித்துப் போகவே உடனே அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இதேபோல் எஸ்.ஏ.சியின் மற்றொரு படத்தை விக்னேஷ் – கிருஷ்ணா என்ற இரு இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இப்படத்திற்கு ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்’ எனப் தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படம் ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற ‘பாக்பன்’ படத்தின் தழுவல் என்று சொல்லப்படுகிறது. டூரிங் டாக்கீஸ்’ படத்துக்குப் பிறகு படங்களை இயக்கப் போவதில்லை என்று இயக்குனர் எஸ்.ஏ.சி., தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் இனி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com