‘உத்தம வில்லனை ரிலீஸ் செய்ய ஒரு கோடி கேட்டு கட்டப்பஞ்சாயத்து’ – திடுக்கிட வைக்கும் மிரட்டல்!

uttரூ 1 கோடி கொடுக்காவிட்டால் உத்தம வில்லன் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என்று தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோசை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரோகினி பன்னீர் செல்வம் மிரட்டி நெருக்கடி கொடுப்பதாக எழுந்துள்ள புகார்தான் இப்போது திரையுலகையே அதிரவைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் கட்டப் பஞ்சாயத்துக்குகளுக்கு எப்போதும் பஞ்சமே இருந்ததில்லை. சரி, இந்த முறை கலைப்புலி தாணு தயாரிப்பாளர் சங்கத் தலைவராகியிருக்கிறார். எனவே இந்த மாதிரி சமாச்சாரங்கள் இனி இருக்காது என்று நினைத்த நேரத்தில்தான், ஒரு பகீர் புகார் வந்துள்ளது. அதுவும் ஒரு கட்டப் பஞ்சாயத்தில் கலைப்புலி தாணுவையே அவமானப்படுத்தும் அளவுக்கு ரசாபாசமாகியிருக்கிறது.

கமலின் உத்தம வில்லன் படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ளது. வரும் மே 1-ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்து, அதற்கான வேலைகளில் மும்முரமாக உள்ளனர்.

இந்த நிலையில் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் ரோகினி பன்னீர் செல்வம் மல்லுக்கு நிற்கிறாராம். விஸ்வரூபம் பட விவகாரத்தில் தங்களுக்கு எதிராக இந்திய போட்டிகள் ஆணையத்தில் கமல் வழக்குத் தொடர்ந்தது, அந்த வழக்கை நடத்தியது, அதற்காக செலவழித்தது மற்றும் அதனால் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கு ஈடாக கணிசமான தொகை கொடுத்தால்தான் ரிலீசுக்கு அனுமதிப்போம் என்று விநியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் போன்றவை போர்க்கொடி தூக்கியுள்ளன.

இந்தப் பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து அபிராமி ராமநாதன், ரோகினி பன்னீர்செல்வம், மதுரை அண்ணாமலை ஆகியோரை அழைத்துக் கேட்டார்களாம் திருப்பதி பிரதர்ஸ் சகோதரர்களும், கமலஹாசன் தரப்பும். அப்போது மல்டிப்ளெக்ஸ் காம்ப்ளெக்ஸ் சங்கத்தின் சார்பில் வந்த அபிராமி ராமநாதன் எங்களுக்கு எந்த இழப்பீடும் வேண்டாம் என்றார்களாம். விநியோகஸ்தர்கள் சங்கமோ தங்களுக்கு ரூ 1,93,000 ஆகியுள்ளது. அதைக் கொடுங்கள் என்றார்களாம். ஆனால் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் ரோகினி பன்னீரும், மதுரை அண்ணாமலையும், அப்புறம் சொல்கிறோம் என்று கூறிவிட்டார்களாம்.

ரூ 1 கோடி வேண்டும்

கூட்டம் முடிந்த பிறகு போஸை தனியாக அழைத்த பன்னீர், தனக்கு ரூ 50 லட்சமும், சங்கத்துக்கு ரூ 50 லட்சமும் கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்று கூற, இதைக் கேட்டு மயங்கிவிழாத குறையாகி விட்டாராம் போஸ்.

பின்னர், “இல்ல சார் நானே ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறேன்.. கொஞ்சம் பார்த்து உதவி செய்யுங்க..” என்று கேட்க, “இங்க பாரு போஸ், உன்னுடைய படம் ரிலீஸ் ஆகனும்னா கேட்டதைக் கொடு, இல்லன்னா எப்போ உனக்கு பணம் கொடுக்க முடியுமோ அப்போ படத்தை ரிலீஸ் செய்,” என்றாராம் பன்னீர்.

தாணுவுக்கு நேர்ந்த அவமானம் என்ன செய்வதென்று தெரியாமல், பலகோடி ரூபாய் போட்டு எடுத்த படத்தை முடக்கப் பார்க்கிறார்களே என்ற வேதனையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணுவிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்ட அவர் அதிர்ச்சியடைந்து, “இது என்னஅநியாயம்” போய் பேசலாம் என்று சுபாஷ் சந்திர போஸை கூட்டிக்குகொண்டு பன்னீரின் தி.நகர் ரோகினி லாட்ஜுக்குப் போயிருக்கிறார்கள்.

அங்கே பன்னீருடன் மதுரை அண்ணாமலையும் இருந்தாராம். “அவர்களிடம் படத்தை எடுத்துவிட்டு போஸ் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் வேறு பணம் கேட்டு மிரட்டுவதாக அழுகிறார். அதைக் குறைத்து வினியோகிஸ்தர்கள் கூட்டமைப்பு வாங்கியது போல செலவான தொகையை மட்டும் வாங்கிக்கொண்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய உதவுங்க”, என்று தாணு கேட்டிருக்கிறார்.

மதுரை அண்ணாமலையோ, “எங்கள் சங்கத்திற்கு ஐம்பது லட்ச ருபாய்க்கு ஒரு பைசா குறைவா கொடுத்தாலும் ரிலீஸ் செய்ய விடமாட்டோம்,” என்று கூறிவிட்டு டமால் என கதவைச் சாத்தி தாணுவை அவமானப்படுத்திவிட்டாராம். மீண்டும் பேரம் எப்படியாவது சிக்கல் தீர்ந்தால்போதும் என்று நினைத்த போஸ், பன்னீருக்கு நெருக்கமான படூர் ரமேஷ் என்பவர் மூலம் பன்னீருடன் மீண்டும் பேசியுள்ளார்.

அப்போது பன்னீருக்கு ரூ 50 லட்சம், சங்கத்துக்கு ரூ 20 லட்சம் என்று முடிவாகியிருக்கிறது. முதல் கட்டமாக அடுத்த நாளே ரூ 25 லட்சத்தை மிகுந்த கஷ்டப்பட்டு கடன் வாங்கி பன்னீருக்கு கமிஷனாகக் கொடுத்துமிருக்கிறார் . மீதியை பின்னர் புரட்டித் தருவதாகவும் அவர் கூறினார். ஆனால் பன்னீர் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம்.

இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது… 50 கோடிக்கு மேல் பணத்தைக் கொட்டிப் படமெடுத்துவிட்டு, சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒருவருக்கு இவ்வளவு பணத்தைக் கொடுக்க வேண்டியிருக்கிறதே என்ற மன அழுத்தம் காரணமாகவே தன்னுடைய கஷ்டத்தை திரையுலகில் பலரிடமும் கூறி அழுதிருக்கிறார்.

சுபாஷ் சந்திர போஸ் மேற்கொண்டு பணம் கொடுக்காததால், தியேட்டர்காரர்களை அழைத்து, உத்தம வில்லனுக்கு ரெட் போட்டிருக்கிறது. நான் சொல்லும் வரை படத்தை வெளியிடக்கூடாது என்று..

யாரும் அக்ரிமென்ட் போடாதீர்கள் என்று கூழியிருக்கிறார்.

பதில் சொல்லாமல் ஓட்டம் இந்த நிலையில்தான், உட்லன்ட்ஸ் திரையரங்கில் தியேட்டர்காரர்களின் பொதுக் குழு கூடியிருக்கிறது. அப்போது போஸுக்கு வேண்டப்பட்ட விருதுநகர் அப்சரா தியேட்டர் ரத்னகுமார், அருப்புக்கோட்டை இளையராணி மகாராணி தியேட்டர் உரிமையாளர் தங்கபாண்டியன், சோழவந்தான் ‘ஏ’ தியேட்டர் உரிமையாளர் டாக்டர் செந்தில் ஆகியோர் பன்னீரின் கட்டப்பஞ்சாயத்து மற்றும் பணம் பறிப்பு பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

உடனே ரோகினி பன்னீர் எந்த பதிலும் சொல்லாமல் கூட்டத்தை விட்டு ஓடிவிட்டார் என்கிறார்கள் பங்கேற்றவர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் இனிமேல் ரோகினி பன்னீர் சங்கத்தின் எந்தப் பொறுப்பிலும் இருக்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.

தயாரிப்பாளர்களும் ரோகினி பன்னீர் லீசுக்கு விட்டிருக்கும் ரோகினி தியேட்டருக்கு இனி படம் தருவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. என்ன கொடுமை பாருங்கள்… வழக்குப் போட்டவர் கமல். ஆனால் அவரிடம் நேரடியாகக் கேட்க இவர்களுக்கு தைரியமில்லை.

கமலை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளரின் கழுத்தை நெறிப்பது எந்த வகை தொழில் நியாயம்?

tamil.filmibeat.com