இன்றைய தேதியில் சென்னை மக்களின் ஒரே சூப்பர் ஸ்டார் நடிகர் சித்தார்த் தான்

siddarthசென்னை: சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ஓடியோடி உதவி செய்யும் நடிகர் சித்தார்த், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் தான் நிஜ ஹீரோக்கள் ஆவர். சென்னையில் பெய்த பேய் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பல பிரபலங்களின் வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது. வெள்ள நேரத்தில் தான் மக்களுக்கு யார் நிஜ ஹீரோ என்பது தெரிய வந்துள்ளது.

பெட்டி, பெட்டியாய் பணம் இருந்தாலும் ஒரு சில லட்சங்களை மட்டும் நன்கொடையாக அளிப்பதாக அறிவிப்பு விடும் பிரபலங்களுக்கு மத்தியில் நடிகர் சித்தார்த் தான் நிஜ ஹீரோ ஆவார்.

சென்னையில் வெள்ளப்பெருக்கு எடுத்ததில் இருந்து அவர் தன்னார்வலர்களை சேர்த்துக் கொண்டு மக்களுக்கு உணவு, உடை, போர்வை ஆகியவற்றை தெருத் தெருவாக சென்று வழங்கி வருகிறார்.

வெள்ளத்திலும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு, போர்வைகளை சித்தார்த், ஆர்.ஜே. பாலாஜி மற்றும் தன்னார்வலர்கள் வழங்கி வருகிறார்கள்.

இன்று மழை இல்லை. அதனால் முழுவீச்சில் மேலும் பலருக்கு உதவ முடியும் என்று சித்தார்த் தெரிவித்துள்ளார். இன்றைய தேதிக்கு சென்னை மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள நிஜ ஹீரோ சித்தார்த் தான்.

ஒரு தனி மனிதனால் இவ்வளவு செய்ய முடிகிறது. அவரை போன்று அதிகம் வேண்டாம் ஒரு 10 அதிகாரிகள் தானாக முன்வந்து தன்னார்வலர்களை வைத்து மக்களுக்கு உதவி செய்தால் அவர்களின் நிலைமை இவ்வளவு மோசமாகி இருக்காதே.

அவர் சூப்பர் ஸ்டார், இவர் சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். ஆனால் இன்றைய தேதிக்கு சென்னை மக்களின் ரியல் சூப்பர் ஸ்டார் சித்தார்த் மட்டுமே.

tamil.filmibeat.com