நான் சுறுசுறுப்பாக இருக்க யோகா காரணம்: சிவக்குமார்

sivakumar-hospitalசிவக்குமார் கம்பராமாயணத்தை ‘கம்பன் என் காதலன்’ என்கிற பெயரில் உரை நிகழ்த்தி அது ஆடியோ சிடியாக விற்பனையில் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து இப்போது ‘மகாபாரதம்‘ தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு அதையும் இரண்டு மணிநேரப் பேருரையாக நிகழ்த்தி இருக்கிறார்.

எனக்கு வயது 74. அதை கடந்து 75–ஐ தொட்டுக் கொண்டு இருக்கிறேன். நான் என்னை செவன்டீஸில் இருப்பதாக நினைப்பதில்லை. செவன்டீனில் இருப்பதாகவே நினைக்கிறேன்.

நான் சென்னைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஓவியம், பயிற்சி என்று 7 ஆண்டுகள் ஓடியது. நடிகனாக சினிமா, நாடகம், டிவி என்று 40 ஆண்டுகள் போய்விட்டன. இது போதும் என்று முடிவெடுத்த பிறகு மேடைப் பேச்சு பக்கம் தாவினேன்.

இதுவரை 16 உரைகள் ஆற்றி விட்டேன் அவற்றில் 15 உரைகள் ஒளிபரப்பாகி விட்டன. அந்த உரைகளில் கம்பராமாயணம். மகாபாரதம் உரைகள் வேறுபட்ட அனுபவங்கள்.

‘கம்பராமாயணம்‘ இந்தியப் பெருங்கடல் போன்றது என்றால் ‘மகாபாரதம்‘ பசிபிக் பெருங்கடல் போன்றது. கம்பராமாயணத்தை இரண்டே வரியில் கூட சொல்ல முடியும் மகாபாரதத்தை அப்படிச் சொல்ல முடியாது. அதில் ஏராளமான கதாபாத்திரங்கள், ஏராளமான கிளைக்கதைகள் உண்டு.

மகாபாரதம் உரைக்காக சுமார் 70 மணிநேரம் ஓடும் கேசட்டுகளை வாங்கிக் குறிப்பெடுத்தேன். இது அப்படிக் குறிப்பெடுத்து தயாரிக்கப்பட்ட உரை. இதை பாமரனுக்கும் புரியும் வகையில்தான் பேசினேன்.

நான் எவ்வித இடைஞ்சல்களும் இல்லாமல் 2 மணி நேரம் இடைவிடாமல் பேசியதற்கு சுறுசுறுப்புக்கு யோகாசனமும் ஒரு காரணம் என்பது மறுக்க இயலாத உண்மை. அதுபோக நான் காபி மற்றும் டீ போன்றவற்றை குடித்து பல வருடங்கள் ஆகிறது. நான் கடைசியாக 1957–ல் தேநீர் பருகுவதை விட்டதாக ஞாபகம்.

ஒரு மனிதனை “நல்லவன்” என்று கூறுவதற்கு அவனுடைய குணநலங்கள் மட்டும் போதாது, அவன் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களும் மிக முக்கியமானது. நான் 75 வயதாகியும் இன்னும் சுறுசுறுப்புடன் பணியாற்றுவதற்கும், ஞாபக ஆற்றலோடு இடைவிடாமல் பேசுவதற்கும் முக்கிய காரணம் நான் கடைபிடித்த பழக்கங்கள் தான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

-http://tamilcinema.news